adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 181 (03.04.18)

ஜெயராஜ், சேலம்.

கேள்வி :

எனது தம்பி பிறந்த ஒரு வருடத்தில் தந்தை ரத்தப்புற்றுநோயால் காலமானார். அதன்பிறகு இவன் தாயாரால் வளர்க்கப்பட்டான். உயர்கல்வி கூட ஒழுங்காக படிக்கவில்லை. அரசுவேலைக்கு பரீட்சை எழுதியுள்ளான். இப்போது கடவுளே இல்லை என்று பெரியார் கொள்கைகளை பேசி ஊர் சுற்றுகிறான். இவன் மாறுவானா? ஆடு, கோழி வளர்க்கப் போகிறேன் என்று அம்மாவிடம் பணம் கேட்டு நச்சரிக்கிறான். இவன் எதிர்காலம் எப்படி இருக்கும்? 27 வயதில் திருமணம் செய்யலாமா?

பதில் :
சந்,கே செவ்
சனி 31-7-1994, காலை 8.35, பூனா சூ பு
ல,சு
குரு,ரா

(சிம்ம லக்னம், மேஷ ராசி. 1-ல் சுக். 3-ல் குரு, ராகு. 7-ல் சனி. 9-ல் சந், கேது. 10-ல் செவ். 12-ல் சூரி, புத. 31-7-1994, காலை 8.35, பூனா)

லக்னத்திற்கு ஒன்பதை சனி பார்த்து, ராசிக்கு ஒன்பதை செவ்வாய் பார்த்து, ஒன்பதாமிடத்தோடு ராகு-கேதுக்களும் சம்பந்தப்பட்டு சூரியன் பனிரெண்டில் மறைந்ததால் சிறுவயதில் தகப்பனை இழந்த ஜாதகம். தற்போது நடந்து கொண்டிருக்கும் சந்திர தசை விரையங்களை மட்டுமே தரும் என்பதால் இப்போது சொந்தத்தொழில் வைக்கக் கூடாது.

2020-ல் ஆரம்பிக்கும் செவ்வாய் தசை சிம்மத்திற்கு யோகனாகி, ராசிநாதனாகவும் அமைந்து, திக்பலத்துடன் இருப்பதால் செவ்வாய் தசை ஆரம்பித்ததும் இவரை நம்பி பணம் கொடுக்கலாம். செவ்வாய் பத்தில் இருப்பதால் கோழிப்பண்ணை தொழில் ஏற்றது. திருமணம் 2020-ம் வருடம் ஆவணி மாதம் நடைபெறும். 38 வயதுவரை பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றி கடவுள் இல்லை என்றுதான் சொல்லிக் கொண்டு திரிவார். அதன் பிறகு மாறுவார்.

பி.லோகராஜ், நாகர்கோவில்.

கேள்வி :

53 வயது கடந்தும் தொழிலில் ஒரு முன்னேற்றமும் இல்லை. 30 லட்சம் கடன் இருக்கிறது. பைனான்ஸ் தொழில் செய்து கொண்டுக்கிறேன். கடன் தீரவும், தொழில் சிறக்கவும் பரிகாரம் சொல்லுங்கள்.

பதில் :
பு சந், சூ,சு ல,ரா, குரு
சனி 2-5-1965, காலை 7.25, கரூர்
செவ்
கேது

ரிஷப லக்னக்காரர்களுக்கு குருவின் தசை யோகங்களை செய்யாது என்பதோடு நஷ்டங்களையும் தரும். சுக்கிரனின் லக்னங்களான ரிஷப, துலாத்திற்கு குரு நன்மையை செய்ய வேண்டும் என்றால் ஒரு இக்கட்டான நிலையில் குரு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவர் யோகத்தை செய்வார். அதிலும் குருவின் தொழில்களை செய்தால் முன்னேற்றமும் இருக்காது.

உங்களுக்கு 25 வயது முதல் 43 வயதுவரை குருவுடன் இணைந்த ராகுதசை நடந்ததாலும், அதன் பிறகு அஷ்டமாதிபதி குருவின் தசையே நடந்ததாலும் தொழில் சிறப்பாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஜாதகப்படி பைனான்ஸ் தொழில் உங்களுக்கு ஏற்றது அல்ல. ஆயினும் இதனை உடனடியாக மாற்ற முடியாத சிக்கல்களும் இருக்கும்.

2021-ல் ஆரம்பிக்கும் ராகுபுக்தி முதல் கடன்கள் தீர்வதற்கான வழி பிறக்கும். இன்னும் 4 வருடங்களுக்கு பிறகு ஆரம்பிக்கும் சனிதசை உங்களுக்கு யோகமான தசை என்பதால் அப்போது தொழிலும் மாறும். கடனும் தீரும். அதுவரை நீங்கள் பொறுத்துதான் ஆக வேண்டும். லக்னாதிபதி சுக்கிரன் கடன் ஸ்தானமான ஆறாமிடத்தை பார்த்து வலுப்படுத்துவதால் எந்த நிலையிலும் கொஞ்சம் கடன் இருக்கத்தான் செய்யும். குருவுடன் ராகு இணைந்திருப்பதால் ஒருமுறை ஶ்ரீகாளகஸ்தி சென்று வரவும்.

கோ.செல்வம் டைலர், 60 மறவப்பாளையம்.

கேள்வி :

நீங்கள் எனக்கு தரப் போவது பதில் அல்ல எங்கள் வாழ்க்கையின் உயிர். எனது மகனின் ஜாதகத்தை பார்த்தீர்கள் என்றால் அவன் என்ன தொழில் செய்கிறான் என்று உங்களுக்குத் தெரியும். நானும் மனைவியும் என்ன பாவம் செய்தோம் என்று தெரியவில்லை. மகன் செய்யும் வேலைகளால் தினமும் செத்துக்கொண்டு இருக்கிறோம். வாழ்நாள் முழுவதும் இந்த தண்டனைதானா என்றும் தெரியவில்லை. மகனும் வாழவில்லை. எங்களையும் வாழவிட மாட்டேன் என்கிறான். பதினைந்து நாட்களுக்கு முன் செத்து விடலாம் என்று முடிவெடுத்தோம். மகனை பற்றிய உங்களுடைய பதிலுக்காக அதை தள்ளி வைத்திருக்கிறோம்.

பதில் :
8-9-1980, காலை 11.00, ஈரோடு. சு, ரா
கே சந்,சூ குரு
செவ் பு, சனி

நடப்பது அனைத்தும் நம் முன்பிறவியால் வரும் விளைவு என்றுதான் உலகின் மேலான நமது இந்துமதம் சொல்லுகிறது. எனவே நம் கையில் ஒன்றும் இல்லை. மக்களால் பெருமைப்படுவதும், அவர்களால் சிறுமைப்படுவதும் நம் கர்மவினை என்றுதான் சொல்ல வேண்டும். இவரைத்தான் மகனாகப் பெறவேண்டும் என்று நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. அதுபோல உங்களுக்குத்தான் பிறக்க வேண்டும் என்று மகனும் பிடிவாதம் பிடிக்க முடியாது. நடப்பவை அனைத்தும் அவன் செயல் என்பதை புரிந்து கொண்டால் வாழ்வின் தத்துவம் பிடிபட்டு விடும்.

ஒரு ஜாதகத்தில் 6, 8-க்குடையவர்கள் லக்னாதிபதியை விட வலுப் பெறக்கூடாது. மகனின் ஜாதகத்தில் லக்னாதிபதியே ஆறுக்குடையவனாகி ஆறாமிடத்தை பார்க்கிறார். லக்னநாயகன் ராகு சாரத்திலும், ராசி கேது சாரத்திலும் இருப்பதால் உங்கள் மகன் மீளமுடியாத போதைப்பழக்கங்களுக்கு ஆளாகி இருப்பான். அதைவிட மேலாக சுபத்துவமற்ற சூரிய சந்திர சேர்க்கையில் பிறந்திருப்பதால் அடுத்தவர் பொருளை அபகரிக்கும் வேலையைச் செய்திருப்பார். இதனால்தான் நீங்கள் மிகுந்த மனக்கஷ்டத்தில் இருப்பதாக ஜாதக அமைப்பு சொல்லுகிறது.

உங்கள் ஜாதகப்படி தற்போது பாதகாதிபதியின் தசை நடந்து கொண்டிருப்பதால், உங்களை மிகவும் சங்கடப்படுத்தக்கூடிய மகனின் விஷயத்தில் பாதகங்களும், அசிங்கங்களும் நடக்கின்றன. மகனின் ஜாதகப்படி இன்னும் எட்டு வருடங்களுக்கு எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில் 2020-ம் ஆண்டு முதல் உங்களுக்கு பாதகாதிபதி தசை முடிவதால் இதுபோன்ற மனஅழுத்தம் உள்ள விஷயங்கள் உங்களுக்கு 2020-க்கு பிறகு இருக்காது. தெய்வத்தை வேண்டுங்கள். எல்லாம் சரியாகும்.

.கார்த்திகேயன், வேலூர்-7.

கேள்வி :

ஜோதிடமேதைக்கு என் பணிவான வணக்கங்கள். ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் கடகலக்னத்திற்கு குரு ஆறாம் அதிபதியாக வருவதால் குருதசை நன்மைகளை செய்யாது என்று எழுதி இருந்தீர்கள். ஆனால் அவர் ஆறுக்கு எட்டில் மறைந்து லக்னத்திலேயே உச்சம் பெற்று தசை நடத்தும் போது தசை முழுவதும் நல்லது செய்ய கடமைப் பட்டவர்தானே? தயவுசெய்து விளக்குங்கள். கடந்த வருடம் மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில் கூடிய விரைவில் பரிகாரம் சம்பந்தமாக மாலைமலரில் தனிக்கட்டுரை எழுத இருக்கிறேன் என்று சொன்னீர்கள். என்னைப் போன்ற மாலைமலர் வாசகர்களுக்காக பரிகாரம் குறித்து விரிவாக எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.

பதில் :

எல்லா கிரகங்களும் முழுக்க முழுக்க நன்மையைச் செய்து விடுவது இல்லை. முழுவதும் தீமையும் செய்வது இல்லை. கடகத்திற்கு குருபகவான் ஆறாம் அதிபதாக இருப்பதால் நன்மைகளை செய்ய மாட்டார் என்பது விதி. ஆனால் அதே நேரத்தில் அவர் லக்னாதிபதி சந்திரனுக்கு நண்பர் என்பதால் தாங்க முடியாத கெடுபலன்களையும் செய்ய மாட்டார்.

குருபகவான் கடன்களை கொடுத்தாலும், சுபக்கடன், அசுபக் கடன் என்கிற விஷயத்தில் நல்ல விஷயங்களுக்கே கடன் வாங்க வைப்பார். ஒருவர் கடன் வாங்கி தொழில் செய்து முன்னேறுவதற்கும், கடன் வாங்கி தண்ணி அடித்து, ஜாலியாக இருந்து விரயம் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லையா?

ஒரு கிரகம் தன் வீட்டிற்கு 6, 8, 12-ல் மறையும் போது அந்த வீட்டின் பலனை செய்யாது என்பது பாவத் பாவ விதி. அதேபோல இரு ஆதிபத்தியம் உள்ள கிரகங்கள் எந்த வீட்டோடு தொடர்பு கொள்கிறதோ அந்த வீட்டின் பலனை வலுத்து செய்யும் என்பதும் இன்னொரு விதி.

அதன்படி கடக லக்னத்திற்கு குரு 2, 10, 12-ல் அமரும்போது ஆறாம் வீட்டிற்கு கேந்திர, கோணங்களில் அமரும் நிலை உண்டாகி கெடுபலனை வலுத்துச் செய்வார். ஜாதகரை கடன்காரர் மற்றும் நோயாளி ஆக்குவார். உங்கள் ஜாதகத்தில் அவர் ஆறாம் வீட்டிற்கு எட்டில் மறைந்து உச்சம் அடைந்து ஒன்பதாம் பாவத்தை தனது பார்வையால் தொடர்பு கொள்கிறார். எனவே கெடுபலன்கள் இருக்காது.

உங்கள் கேள்வியின் ஒரு வரியில் மறைமுகமாக இன்னொரு ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். அதாவது லக்னத்திலேயே உச்சம் பெற்று இருக்கும் போது தசை முழுவதும் நல்லது செய்ய கடமை பட்டவர்தானே என்று கேட்டிருக்கிறீர்கள். எந்த ஒரு கிரகமும் தனது தசை முழுவதும் நன்மைகளை மட்டுமோ, அல்லது தீமைகளை மட்டுமோ செய்துவிடுவது இல்லை.

இதுபோன்ற நிலைகளில் தொடர்பு கொண்ட பாவத்தின் பலனை 80 சதவீதமும், இன்னொரு பாவத்தின் பலனை 20 சதவீதமும் செய்யும். அதன்படி கடகத்திற்கு அவர் ஒரு நிலையில் ஆறாமிடத்து பலனையும் செய்வார். ஆனால் எப்போது எப்படி எந்த அளவிற்குச் செய்வார் என்பதுதான் ஜாதகத்தின் சூட்சுமமான நிலை. கடுமையான வேலைப்பளுவினால் எழுத நேரம் இல்லாத நிலையில் இருக்கிறேன். இருப்பினும் வரும் வெள்ளிக்கிழமை முதல் மாலைமலரில் புதிய கட்டுரைகளை எழுத இருக்கிறேன். நீங்கள் கேட்கும் பரிகார விளக்கங்களும் அதில் இருக்கும்.

ஆயில்யத்தை திருமணம் செய்தால் மாமியார், மாமனார் உயிருக்கு ஆபத்தா ?

ஆர்.கதிர்வேல், சென்னை-23.

கேள்வி :

மகளின் ஜாதகப்படி லக்னத்தில் கேது, 2-ல் செவ்வாய், 7-ல் ராகு, 8-ல் சனி இருப்பது தோஷம் என்கிறார்கள். இது உண்மையா? அப்படியென்றால் இதற்கு பரிகாரம் என்ன? ஆயில்ய நட்சத்திர மணமகனுக்கு என் மகளை கொடுக்கலாமா? இதனால் பெற்றோரின் உயிருக்கு ஆபத்து வருமா? மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்?

பதில் :
சந் ல,சூ கே
4-7-1991 காலை 6 மணி நாகபட்டினம் பு,செ குரு
சனி சுக்
ரா

ஒரு ஜாதகத்தில் லக்னப்படி 2, 7, 8 போன்ற இடங்களில் பாபக் கிரகங்கள் அமர்ந்திருந்தால் மட்டும் கெடுதல்களைச் செய்து விடுவது இல்லை. இதனை தோஷம் என்றும் சொல்லி விட முடியாது.

பரம்பொருள் உலகில் எல்லாவற்றிற்கும் இரண்டு விதமான இணை நிலைகளை கொடுத்திருப்பது போல ஜோதிடத்திலும் லக்னம், ராசி என்ற இரண்டு விதமான இணை அமைப்புகள் இருக்கின்றன. லக்னப்படி மேற்கண்ட இடங்களில் இப்படிப்பட்ட  கிரக நிலைகள் இருக்கும்போது, ராசிப்படியும் இதேபோல் 2, 7, 8-ல் கோள்கள் அமையுமானால் கடுமையான தோஷமாகி கெடுபலன்களை செய்யும். இந்த அமைப்பு உங்கள் பெண்ணிற்கு இல்லை. மகள் ஜாதகத்தில் ராசிப்படி 2, 7-ம் இடங்களை எவ்வித பாபக் கிரகமும் தொடர்பு கொள்ளவில்லை என்பதால் அவளது திருமண வாழ்க்கையில் எவ்வித சங்கடங்களும் உறுதியாக வராது.

மேலும் 2, 7, 8-ல் பாபக் கிரகங்கள் அமரும் போது அந்த இடங்களுக்கு குருவின் தொடர்பு இருக்குமானால் தோஷம் வலுவிழந்து போகும். மகள் ஜாதகப்படி 2-ல் உள்ள நீச செவ்வாயுடன் உச்ச குரு இணைந்து செவ்வாயை புனிதப் படுத்துவதோடு 8-ல் இருக்கும் சனியையும் குரு பார்க்கிறார். இது தோஷ நிவர்த்தி.

அதேபோல 7-மிடத்தில் ராகு இருந்தாலும் அவர் சுபரான உச்ச குருவின் வீட்டில்தான் இருக்கிறார். இதுவும் தோஷ நிவர்த்திதான். எல்லாவற்றையும் விட 8-ல் இருக்கும் சனியின் தசை மகளின் 17 வயதில் முடிந்து தற்போது லக்னாதிபதி புதனின் தசை நடப்பதால் மகளுக்கு திருமண விஷயத்தில் நன்மைகள் மட்டுமே நடைபெறும். கவலை வேண்டாம்.

ஆயில்ய நட்சத்திர மணமகனின் ஜாதகம் மகளுக்கு ஏற்ற வகையில் இருக்கும் பட்சத்தில் தாராளமாக திருமணம் செய்யலாம். ஒருவரின் நட்சத்திரத்தினால் மாமியார், மாமனார், மச்சானுக்கு ஆகாது என்று எந்த மூலநூலிலும் ஞானிகள் சொல்லவில்லை. இதுபோன்ற அபத்தமான கருத்துக்கள் ஜோதிடர்களால் ஏற்படுத்தப்பட்டவை.

ஆண். பெண் இருவரின் நட்சத்திரத்தை மட்டும் வைத்து “பத்துப்பொருத்தம்” பார்க்கும் முறை முற்றிலும் தவறானது. ஜோதிடத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் இந்த பத்துப் பொருத்தமும் ஜோதிடர்களால் சொல்லப்பட்டதுதான். ஜோதிடத்தை ஆதியில் அருளிய மூலகர்த்தாக்கள் இவற்றைச் சொல்லவில்லை. இடையில் வந்த கோணல் இது.

திருமணத்திற்கு பத்துப் பொருத்தங்கள் மட்டும் பார்த்தால் போதும் என்றால் இன்றைக்கு விவாகரத்து கோர்ட்டுகள் அதிகமாக இருக்காது. மகளுக்கு குருவின் வீட்டில் இருக்கும் ராகுவே திருமணத்தை கொடுக்க கூடியவர் என்பதால் அடுத்து வரும் ராகு புக்தியில் இந்த வருட இறுதி, அடுத்த வருட ஜூன் மாதத்திற்குள் திருமணம் நடைபெறும்.

2 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 181 (03.04.18)

  1. rishaba lagnam. rishaba kethu , mithuna sooriyan kadaga chandhiran,bhudhan,simma sivvai,kanni guru,viruchiga raghu,kumba sani. aayilya star girl. if any dhosham for girls mother and father.in.law.

  2. சூரியனுடன் 4-ங்கு டிகிரி இனைந்த குருவிற்கு ஒளி இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *