adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
பாபத்துவமும், சூட்சும வலுவும் – (E-014)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8286 99 8888

சென்றவாரம் கேது தரும் சூட்சும வலு அமைப்புகளை விரிவாகப் பார்த்த நிலையில் ஒரே நேரத்தில் கேதுவால் சூட்சும வலுவும், வேறு வித கிரக நிலைகளால் அங்கே பாபத்துவ அமைப்புகளும் முன் நிற்கையில் எது அதிகமான பலனைத் தரும் என்பதை  தற்போது பார்க்கலாம்.  


ஒரு கிரகம் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது என்பதைத் தாண்டி, எந்த நிலையில் இருக்கிறது என்பதில்தான் அந்த கிரகம் தரும் பலன்கள் அடங்கி இருக்கின்றன என்பதை இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே நான் விளக்கியிருக்கிறேன்.  

அதாவது கேந்திரம், கோணம், மறைவு ஸ்தானங்கள் என்பது போன்ற ஒரு கிரகம் இருக்கும் இடத்தையும் தாண்டி, அக் கிரகத்தின் தன்மை பாபத்துவமாக அல்லது சுபத்துவ, சூட்சும வலுவாக எவ்வாறு இருக்கிறது என்பதைக் கணிக்கும் போதுதான் அது என்ன பலன்களைத் தரும் என்பதை உணர முடியும்.  

கேது தரும் சூட்சும வலுவை கணிக்க முயலும் போது சில நிலைகளில் குழப்பங்கள் வரும். குறிப்பாக செவ்வாயும், சனியும் ஓரிடத்தில் இணைந்திருக்கும் பொழுதோ அல்லது ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதோ அங்கே கடுமையான பாபத்துவம் ஏற்படும். இது போன்ற நேரங்களில்  அங்கே கேது இணைந்திருக்கும்போது கிரகங்களின் உண்மையான வலுவை கணிக்க குழப்பமும் சிரமமும் ஏற்படும்.

உதாரணமாக சுக்கிரன், செவ்வாயோடு இணைந்திருக்கும் நிலையில் சனியின் பார்வையையும் பெற்றிருந்தால் அங்கே சுக்கிரன் தனது மிக முக்கியத்துவமான செயலான காமத்தை தர இயலாத நிலை ஏற்படும்.  இது போன்ற நிலைகளில் ஒருவருக்கு திருமணம் கண்டிப்பாக தாமதமாகும்.  அல்லது திருமண வாழ்க்கை சரியாக அமையாது. இது சுக்கிரன் பெறும் கடுமையான பாபத்துவத்தை குறிக்கிறது.  

இதுபோல ஒரு கிரகத்தை வலுவிழக்கச் செய்வது அன்றி, ஓரிடத்தில் சனியும் செவ்வாயும் இணைந்து இருந்தாலும் இவர்கள் இருக்கும் இடமும் இருவரின் பலத்தைப் பொறுத்து நசித்துப் போகிறது. அதே நேரத்தில் இவர்கள் இருவருடனும் கேது இணைந்திருந்தால் இருவரில் ஒருவர் கண்டிப்பாக சூட்சும வலுவை அடைவார்.  

சனி, செவ்வாய் இணைந்திருப்பது, மற்றும் சம சப்தமமாக பார்த்துக் கொள்வது  அல்லது செவ்வாயின் நான்காம் பார்வை சனிக்கும், சனியின் பத்தாம் பார்வை செவ்வாய்க்கும் ஒரே நேரத்தில் இருப்பது, இருவருக்குமே நன்மைகளை தராத கடுமையான ஒரு நிலை.

இப்படிப்பட்ட அமைப்பில் இந்த இருவருடனும் கேது இணைந்திருந்தாலும் இருவரும் சூட்சுமவலு அடைந்திருக்கிறார்கள் என்று கணிக்க கூடாது. இந்த ஓர் இடத்தில் மட்டும் கேது தரும் சூட்சும வலுவை விட பாபத்துவம் மட்டுமே மேலோங்கி இருக்கும்.

இதுபோன்ற நிலைகளில் கேதுவின் இணைப்பைப் பெறும் சனி மற்றும் செவ்வாய் இருவரும் சூட்சும வலுவை இழந்து, தான் இருக்கும் இடத்தை பொறுத்து கடுமையான பாபத்துவத்தை அடைகிறார்கள். அதுபோலவே தான் பார்க்கும் அல்லது தொடர்பு கொள்ளும் கிரகத்தையும் நன்மைகளைச் செய்ய விடாமல் தடுப்பார்கள்.  

கீழே ஒரு உதாரண ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன்.  பாபத்துவ மற்றும் சுபத்துவ சூட்சுமவலு அமைப்புகளை எப்படி கணிப்பது என்பதை இந்த ஜாதகத்தில் நீங்கள் ஓரளவு உணர முடியும்.  சமீபத்தில் என்னிடம் பலன் கேட்கப்பட்ட ஜாதகம் இது.  

இந்த ஜாதகர் இந்தியாவைத் தாண்டி, மேற்கு நாடான ஐக்கிய அரபு குடியரசில், அரசுத்துறை பெட்ரோலிய எண்ணெய் கிணறுகள் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

11- 7-1972 அதிகாலை 4-45 நிமிடத்திற்கு திருச்சியில் இவர் பிறந்திருக்கிறார்.  

மிதுன லக்னம், மிதுன ராசியில் பிறந்துள்ள இவருக்கு லக்னத்தில் சூரியனும், சந்திரனும் ஏறக்குறைய அமாவாசை நிலையில் இணைந்து ஏழில் இருக்கின்ற குருவின் பார்வையில் சுபத்துவமாக இருக்கிறார்கள்.  

எனது சுபத்துவ சூட்சுமவலு கோட்பாட்டின்படி சிம்மமும் சிம்மாதிபதியாகிய சூரியனும் குருவின் பார்வையில் இருப்பதால் அதாவது சூரியனை நேருக்கு நேர் பார்க்கும் ஆட்சி பெற்ற குருவின் அதிவக்ர நிலை ஜாதகத்தில் இருப்பதால் இவர் வெளிநாட்டில் அரசு வேலை செய்கிறார்.  

ஜனன கால குரு தசையில் 7 வருடம் 3 மாதம் 12 நாள் மீதமிருக்கும் நிலையில் பிறந்த இவருக்கு 26 வயது வரை சனி தசை மிகவும் யோகமாகவே இருந்தது. ஒருவரின் ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்துவமாக இருக்கிறதோ அதன் தொழில் அவருக்கு அமையும் எனும் என்னுடைய கோட்பாட்டின் இங்கே ஆட்சி பெற்ற சுக்கிரனுடன் மிக நெருக்கமாக சில டிகிரிக்குள் இணைந்துள்ள சனியின் மிக முக்கிய காரகத்துவமான பெட்ரோலியத் துறையில், சிம்மம் சுபத்துவமாக உள்ளதால் அரசுத் துறையில் இருக்கிறார். 

சர ராசிகள் எனப்படும் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய 4 ராசிகளில் கடகம் ஜல ராசி என்பதால் கடகத்தில் இருக்கும் கிரகங்கள் தன்னுடைய தன்மைக்கேற்ப தனது தசையில் வெளிநாட்டு வாசத்தை தரும் என்பதால் இவர் தற்பொழுது வெளிநாட்டில் பணிபுரிகிறார்.

மேற்கு திசையை குறிக்கக்கூடிய சனி, வெளிநாட்டை குறிக்கும் பாவகமான பன்னிரண்டில் அமர்ந்து அவரே தன லாபத்தை கொடுக்கக்கூடிய பாக்கியாதிபதியாக  இருப்பதால் இவர் ஒரு மேற்கு நாட்டில் பணிபுரிகிறார்.  

தற்போது இவருக்கு கேது தசையில் சனி புக்தி நடந்து கொண்டிருக்கிறது. இளம் வயதிலேயே அரபு நாட்டு பணிக்கு வந்து விட்ட இவருக்கு, சனி தசை யோகமாகவே இருந்த நிலையில் புதன் தசை தனம், வாக்கு, குடும்பம் போன்றவைகளை மிகவும் பாதித்து கடுமையான கவலைகளுக்கு உள்ளாக்கியது.  

இத்தனைக்கும் லக்னாதிபதி புதன், சந்திரனுடன் பரிவர்த்தனை பெற்று இருக்கும் அருமையான யோக ஜாதகம் இது. இங்கு லக்னாதிபதியின் பரிவர்த்தனை இவருக்கு ஒரு நிரந்தரமான வேலை அமைப்பை மட்டுமே கொடுக்குமே தவிர நிம்மதியான குடும்ப வாழ்வை அல்ல.  

ஏனெனில் இங்கு குடும்பாதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு 12ல் மறைந்த நிலையில் அமாவாசை நிலையிலும் இருப்பதால், இவருக்கு குடும்ப வாழ்வில் நிம்மதி இருக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் குருவின் பார்வையில் சந்திரன் இருப்பதால் குடும்பம் அமைந்தே தீரும்.  

மிக முக்கியமான இளமைப்பருவத்தில் ஆரம்பித்துள்ள இவரது புதன் தசை நீச்ச செவ்வாயின் ( செவ்வாய் இங்கே மறைமுக நீச்ச பங்கத்தை சந்திரனின் பரிவர்த்தனையால் அடைந்திருக்கிறார்,) இணைவுடன் சனியின் பார்வையையும் பெற்றிருப்பதால் இவருக்கு நன்மைகள் செய்திருக்க வாய்ப்பே இல்லை.

அதைப்போலவே தற்போது நடந்து கொண்டிருக்கும் தசாநாதன் கேதுவும் செவ்வாய் மற்றும் சனியின் பார்வையைப் பெற்றுள்ளதால் மிக மிக கடுமையான பலன்களை குடும்பத்தில் அதாவது மனைவியின் மனப்போக்கில் செய்து கொண்டிருக்கிறார்.  

அடுத்து வரும் சுக்கிர தசையும் இவருக்கு திருமண வாழ்வில் நிம்மதிகளை தரக்கூடிய நிலையில் இல்லை. அதாவது வாழ்வின் மிக முக்கிய காலகட்டம் வரை இவர் உள்நாட்டில் மனைவியுடன் சேர்ந்து இருக்கும் அமைப்பு இல்லை. அதே நேரத்தில் மனைவியை நிரந்தரமாக பிரிந்து இருக்கவும் இயலாது.

சுக்கிரன் சனியுடன் இணைந்து பாபத்துவமாக இருப்பதால் இவர் சுக்கிர தசையின் முதல் பாதி வரை தாயகத்திற்கு வந்து மனைவியுடன் இணைய முடியாது. அதே நேரத்தில் சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் மனைவியை நிரந்தரமாகப் பிரியவும் முடியாது.

8 - 12ஆம் இடங்கள் சுபத்துவமாக இருந்தால் மட்டுமே ஒருவர் நிரந்தரமாக வெளிநாட்டிலேயே தங்கி விட முடியும் என்பதை என்னுடைய கோட்பாட்டின்படி 100 சதவிகித துல்லிய நிலையில் சொல்லி வருகிறேன். அதே நேரத்தில் ஒருவரை நிரந்தரமாக வெளிநாட்டில் தங்க வைக்க கூடிய எட்டாமிடம் சுபத்துவமாக இல்லாவிடில் அவர் பொருள் சம்பாதித்து விட்டு மீண்டும் தாய் நாட்டிற்கு வந்து விடுவார்.  

இவரது ஜாதகத்தில் ராகு எட்டில் அமர்ந்து அந்த பாவகம் பாபத்துவமாக இருப்பதால் இவரால் நிரந்தரமாக வெளிநாட்டில் இருக்க முடியாது. தன்னுடைய 60 வயதிற்கு மேல் சுக்கிர தசையின் பிற்பகுதியில், சுக்கிரன் தன் ஐந்தாம் பாவக பலன்களை செய்ய ஆரம்பிக்கும் பொழுது, இவர் தனது குழந்தைகளுடன் இருந்தே ஆகவேண்டும் என்பதால் இவர் மீண்டும் தாயகத்திற்கு வந்துவிடுவார்.  

அதனை அடுத்து வருகின்ற சூரிய, சந்திர தசைகள் குருவின் பார்வையில் இருப்பதால் அந்திம காலத்தில் நிம்மதியாக இருக்க கூடிய ஜாதகம் இது.

ஜோதிடத்தில் ஒரு குற்றச்சாட்டு எப்போதும் சொல்லப்படுகிறது. அதாவது நடந்து முடிந்த பிறகுதான் அது பற்றிய காரணங்களை ஜோதிடர்கள் சொல்கிறார்கள். நடப்பதற்கு முன்பே அதைச் சொல்ல முடிவதில்லை என்பதுதான் அது.  

மிகச் சமீபத்தில என்னிடம் பலன் கேட்ட இந்த ஜாதகர் கூட, இந்தக் கட்டுரையை படிப்பவராக இருக்கலாம். மேலே நான் சொன்ன பலன்கள் அனைத்தும், தன்னைப்பற்றி இந்த ஜாதகர் என்னிடம் சொல்லாமலேயே, நான் அவரிடம் கேட்காமலேயே, உங்களுக்கு இதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்று சொன்ன பலன் இது.

அதாவது ஜாதகர் என்னிடம் பலன் கேட்க ஆரம்பிக்கும் முன்பே, நீங்கள் தற்போது அரபு நாட்டில் பெட்ரோலியத் துறையில் பணி புரிந்து கொண்டிருக்கிறீர்கள். சனி தசை வரை மிகவும் நன்றாக இருந்த நீங்கள் தற்போது புதன் தசையில் நிம்மதியான குடும்ப அமைப்பில் இல்லை.  

மேலும் நீங்கள் நிரந்தரமாக வெளிநாட்டில் இருக்கப்போவது இல்லை, அது உங்களுடைய எண்ணமும் இல்லை. இன்னும் கூடுதல் வயதானவுடன் திரும்பி வந்து குடும்பத்தோடு சேருவது உங்கள் எண்ணம் என்று சொல்லும்பொழுது ஆம், ஆம், ஆம்  என்ற அமைப்பில் கேட்டுக் கொண்டே இருந்தே இந்த ஜாதகர் முடிவில் நீங்கள் கூறியது அனைத்தும் எழுத்துப் பிசகாமல் சரி என்று கூறினார்.  

இதுவே நான் அடிக்கடி வலியுறுத்தும் சுபத்துவ சூட்சுமவலு கோட்பாட்டின் சிறப்பு.  

எப்பொழுது நீங்கள் ஒரு கிரகமும், பாவகமும் சுபத்துவமாக அல்லது பாபத்துவமாக இருக்கின்ற நிலையை சரியாக புரிந்து கொண்டு, அதன் பிறகு வேத ஜோதிடம் சொல்லும் ஆதிபத்திய, காரகத்துவங்களை அங்கே பொருத்திப் பார்க்கும் பொழுது உங்களால் முன்கூட்டியே மிகவும் தன்னம்பிக்கையுடன் பலன் சொல்ல முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த ஜாதகத்தை சொல்லியிருக்கிறேன்.

பாப கிரகங்களோடு இணைகின்ற கேது தரும் சூட்சும வலுவோடு, கிரகங்களின் அதிக சுபத்துவம், குறைந்த சுபத்துவம், மிகக் குறைந்த பாபத்துவம் என்பதை ஒளி நிலை கூடுதல் குறைவு அமைப்போடு எப்போது ஒருவர் வேத ஜோதிடத்தை புரிந்து கொள்கிறாரோ அப்போது அவரால் நிச்சயமாக நூறு சதவிகித பலனை உணர முடியும்.  

கூடுதல் நிலைகளை அடுத்த வெள்ளி பார்க்கலாம்.

மாலைமலரில் 20.11.2020 இன்று வெளிவந்தது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.