adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 282 (31.03.2020)

ஜோதிடக்கலை அரசு
ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

ராஜன், கடலூர்.

கேள்வி:

நான் பொறியியல் படித்து, என் துறை தொடர்பான தொழிற்சாலையில் கடந்த 4 வருடங்களாக மிகவும் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து, கடந்த டிசம்பர் மாதம் நின்று விட்டேன். எனக்கு தொழிற்சாலையில் பணி புரிய விருப்பம் இல்லை. வங்கியில் பணிபுரிய ஆசை. வங்கியில் வேலை கிடைக்குமா? நீங்கள் வங்கிப் பணிக்கு பத்தாம் வீட்டுடன் குரு தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளீர்கள். எனக்கு அந்த அமைப்பு இல்லை. எனவே எந்த கிரகம் தொடர்பான வேலை அமையும்? எப்போது அமையும்? வங்கிப் பணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:

(கன்னி லக்னம், தனுசு ராசி. 2ல் குரு, 3ல் ராகு, 4ல் சந், 6ல் சனி, 7ல் செவ், 8ல் சூரி, புத, 9ல் சுக், கேது, 29-4-1994 மாலை 5- 30 க்கு முன், கடலூர்)

அனுப்பியுள்ள ஜாதக அமைப்பின்படி நீங்கள் துலாம் லக்னத்தில் பிறந்திருக்க வாய்ப்பில்லை. துலாம் லக்கினத்தில் பிறந்திருந்தால் உங்கள் ஜாதகப்படி பொறியியல் படித்திருக்க முடியாது. என்னுடைய கணிப்புப்படி குறிப்பிட்டுள்ள பிறந்த நேரத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன்பாகவே நீங்கள் பிறந்திருக்க வேண்டும். அதன்படி நீங்கள் கன்னி லக்னமாக வருவதால்தான் உங்களுக்கு வங்கித் துறையில் பணிபுரிய ஆசை இருக்கிறது.

இந்த அமைப்பின்படி தற்போது உங்களுக்கு சூரிய தசை நடந்து வருவதாலும், சூரியன் குருவின் பார்வையிலும், அடுத்து நடக்க இருக்கும் சந்திரன் குருவின் வீட்டிலும் அமர்ந்து, சிவராஜயோகத்தில் அமைந்திருக்கும் குரு பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் உங்களால் வங்கித் துறையில் பணிபுரிய முடியும். இந்த அமைப்பால்தான் உங்களுக்கு வங்கித் துறையில் பணிபுரிவது பெரிய ஆசையாக இருக்கிறது. வங்கித் தேர்வுகளை எழுதுங்கள். அடுத்த வருடம் வங்கியில் பணி புரிய முடியும். வாழ்த்துக்கள்.

எஸ். அம்பிகா, வந்தவாசி.

கேள்வி:

வாழும் ஜோதிட ஞானிக்கு சிரம் தாழ்ந்த வணக்கம். 35 வயதாகும் என் மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும்? எப்படிப்பட்ட வரன் அமையும்? அமையும் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? குழந்தைச்செல்வம் எவ்வாறு? ஏழரைச்சனி திருமணத்தை பாதிக்குமா? குழந்தைச் செல்வத்தை தள்ளி போடுமா? செய்யாத பரிகாரம் இல்லை.

பதில்:

(மீன லக்னம், மகர ராசி, 3ல் ராகு, 9ல் புத, சனி, கேது, 10ல் சூரி, குரு, 11ல் சந், சுக், 12ல் செவ், 25-12- 1984 மதியம் 12-55 காஞ்சிபுரம்)

மகளுக்கு லக்னாதிபதி குரு பத்தாமிடத்தில் திக்பலத்தில் அமர்ந்துள்ள சூரியனோடு சேர்ந்து, ஆட்சி வலுவாகி, சிம்மமும், சூரியனும் வலுவான நிரந்தர வேலை அமைப்புள்ள நல்ல யோக ஜாதகம்தான். என்றாலும் சரியான பருவத்தில் 14 வயது முதல் 32 வயது வரை செவ்வாய், சனி தொடர்பு பெற்ற ராகு தசை வந்ததால் இதுவரை திருமணம் நடக்கவில்லை.

இந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்து மகளுக்கு தாம்பத்திய சுகம் கிடைக்கும் அமைப்பு இருக்கிறது. அடுத்த வருடம் ஏப்ரலுக்குள் குருதசை, புதன் புக்தியில் கண்டிப்பாக திருமணம் நடக்கும். குழந்தைச் செல்வம் இரண்டும் உண்டு. தாமத திருமணம், நல்ல வாழ்க்கை என்பது மகளின் அமைப்பு. கவலைப்பட வேண்டாம். எதிர்காலத்தில் நன்றாக இருப்பார். வாழ்த்துக்கள்.

வி. நாராயணன், சேலம்.

கேள்வி:

மகள் பிஏ ஆங்கிலம் இறுதியாண்டு படித்து வருகிறார். வரும் மே மாதம் 2020இல் படிப்பு முடிகிறது. மேற்கொண்டு படிக்க வைக்கலாமா? அரசு தேர்வுக்கு முயற்சி செய்யலாமா? எப்பொழுது முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்? அரசு வேலைக்கு வாய்ப்புள்ளதா? இந்த ஜாதகருக்கு எப்போது திருமணம் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று பதில் அளிக்கவும் ஐயா.

பதில்:

(சிம்ம லக்னம், கும்ப ராசி, 3ல் செவ், 6ல் கேது, 7ல் சந், 9ல் குரு, சனி, 10ல் சூரி, 11ல் புத, 12ல் சுக், ராகு 7-6-1999 மதியம் 12 -22 சேலம்).

சிம்ம லக்னமாகி, லக்னத்தை நீச்ச சனியுடன் இணைந்த குரு பார்த்து, லக்னாதிபதி சூரியன் பத்தாமிடத்தில் திக்பலம் பெற்ற அமைப்புள்ள ஜாதகத்தைக் கொண்ட மகளுக்கு அரசுவேலை அமைப்பு இருக்கிறது. 2022 சனி தசை சந்திர புக்தியில் மகளுக்கு அரசு வேலை கிடைக்கும். அரசுத்தேர்வுகள் எழுதச் சொல்லவும்.

ஏழாம் அதிபதி சனி நீச்சம் ஆனாலும் குருவுடன் இணைந்து சுபத்துவம் ஆக இருக்கின்ற அமைப்பில், லக்னாதிபதி சூரியன் வலுவாக அமைந்து குடும்பாதிபதி புதன் ஆட்சி நிலையில் இருப்பதால், அவளுக்கு 23 வயதில் திருமணம் செய்யலாம். கும்ப ராசிக்கு ஜென்மச் சனி விலகியதற்கு பிறகு வாழ்க்கையில் நன்றாக இருப்பாள். வாழ்த்துக்கள்.

வி. மணி, மதுரை.

கேள்வி:

குருவிற்கு வணக்கம். உங்களுடைய எழுத்துக்கள் எல்லாவற்றையும் படிப்பவன் நான். மிகவும் எளிமையாகவும், அருமையாகவும், எல்லோருக்கும் புரியும்படி எழுதுவது உங்கள் சிறப்பு. எனக்கு 58 வயதாகிறது. வேலை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பிரைவேட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன். எப்படியும் நான்கைந்து வருடங்களுக்கு ஒருமுறை வேலை போய்விடுகிறது. நிர்வாகத்தினர் எதாவது காரணம் சொல்லி அல்லது கம்பெனி நஷ்டமாகி வேலை இல்லாமல் இருக்கிறேன்.

1997 இல் வேலை போய்விட்டது. பிறகு ஐந்து மாதம் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு பாதி சம்பளத்தில் ஒரு வேலை கிடைத்தது. பிறகு சென்னையில் ஒரு வேலை கிடைத்து 2003இல் போய் விட்டது. அடுத்து 2015 ல் வேலை போய் பத்து நாளில் அடுத்த வேலை பெங்களூரில் கிடைத்தது. அங்கிருந்து 2017இல் சென்னைக்கு வந்தேன். மீண்டும் 2018 பிப்ரவரியில் வேலை போய் விட்டது. பிறகு 2018 கடைசியில் வேலை கிடைத்து மறுபடியும் 2019 மே வேலை போய்விட்டது. சம்பளம் பாதி தான் தருவேன், பழைய ஆள் வந்துவிட்டார் என்பது போன்ற காரணங்களால் வேலை போகிறது. எதிர்த்து கேட்டாலும் பிரயோஜனம் இல்லை என்பதால் வாயை மூடிக் கொண்டு வெளியே வந்து விடுவேன்.

அடிக்கடி வேலை போய் நான் சிரமப்படுவதற்கு என்ன காரணம்? எப்போது வேலை கிடைக்கும்? இனியாவது சிரமம் இல்லாமல் இருக்க முடியுமா? என்னையும் என் மனைவியையும் மகன் பார்த்துக் கொள்வானா? மகனால் நிறைய விரயம் இருக்கிறது. மனது நிறைய வேதனைகள் இருந்தாலும் இத்தனை நாள் காத்த இறைவன் இனியும் காப்பான் என்ற நம்பிக்கையுடன் உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

பதில்:

(தனுசு லக்கனம் மேஷ ராசி 2ல் சனி கேது 3-ல் குரு 5-ல் சந்திரன் செவ்வாய் 6-ல் சூரியன் புதன் ஏழில் சுக்கிரன் எட்டில் ராகு 31 5 1962 இரவு 9 30 சிவகங்கை)

இதுவரை நடந்த வாழ்க்கைச் சம்பவங்களை அழுது புலம்பியுள்ள நீங்கள், இத்தனை நாள் காத்த இறைவன் இனியும் காப்பான் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் என்று கடைசியாக இரண்டு வரிகள் எழுதி இருக்கிறீர்கள் பாருங்கள்... அந்த நம்பிக்கைதான் எல்லாம். இந்த வரிகள் உங்களை நிச்சயம் காப்பாற்றும்.

வாழ்க்கையின் மிக முக்கிய பருவத்தில், எட்டாமிடத்தில் சனி, செவ்வாய் பார்வையில் அமர்ந்த ராகுவின் தசை பதினெட்டு வருடங்கள் நடந்ததால் உங்களுக்கு எவ்வித நன்மைகளும் வேலை விஷயத்திலும், குடும்ப விஷயத்திலும் நடக்கவில்லை. அதோடு இரு மாபெரும் சுபர்களான சுக்கிரனும், குருவும் கடும் பாபத்துவ ராகுவின் நட்சத்திரத்தில் இருக்கிறார்கள்.

2015 முதல் உங்களுக்கு அஷ்டமச்சனி நடந்த நிலையில், தற்போது தனுசு லக்னத்திற்கு வரக்கூடாது என்று நான் அடிக்கடி எழுதும், குரு தசையில் சுக்கிர புக்தி நடந்து கொண்டிருக்கிறது. குருவும் சுக்கிரனும் பலவீனமடைந்தால் ஒருவருக்கு பணம் சம்பாதிக்கும் திறன் இல்லாது போய்விடும்.

எட்டில் அமர்ந்த ராகுவின் நட்சத்திரத்தில் லக்னாதிபதி குரு அமர்ந்திருப்பதால் இதுவரை நன்மைகள் நடக்கவில்லை. அடுத்து வரும் சூரிய புத்தி முதல் உங்களுக்கு ஓரளவு நன்மைகள் இருக்கும். வாழ்வின் பிற்பகுதியில் வருகின்ற சனி தசை ஓரளவிற்கு ஆறுதலைத் தரும். ஐந்தாம் அதிபதி ஐந்தாம் வீட்டில் ஆட்சியாகி, சந்திரனுடன் இணைந்து இருப்பதால் மகன் ஓரளவுக்கு கை கொடுப்பார். இனிமேல் சோதனைகள் எதுவும் இல்லை. வாழ்த்துக்கள்.

(31.03.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

குருஜி அவர்கள் முகநூல்-யூடியூபில் பதில் தருவதில்லை. அவரது பதில்களுக்கு ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.