adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 206 (25.09.18)

எஸ். ரவிச்சந்திரன், கடலாடி-வேப்பங்குளம்.

கேள்வி :

திருக்கணித பஞ்சாங்கப்படி தாங்கள் கூறும் ஒவ்வொரு பலன்களும் நூறு சதவிகிதம் சரியாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த ஜோதிடர்களிடம் வாக்கிய பஞ்சாங்கத்தை தவிர்த்து திருக்கணிதத்தை பின்பற்றுமாறு கூறி வருகிறேன். இளம்வயது துலாம் ராசிக்காரர்களுக்கு நல்லகாலம் தொடங்கி விட்டதாக சொல்லி வருகிறீர்கள். எனக்கு 53 வயது நடக்கிறது. என் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூறுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

பதில் :
பு, செ கு ரா
சூ, ச,னி
11.3.1966 காலை 9.30 ராமநாதபுரம்
சு  
கே சந்

வாக்கிய பஞ்சாங்கம் என்பது தெய்வ குற்றம். இன்றைக்கு தமிழ்நாட்டில் நடக்கின்ற அநேகம் விவாகரத்துகளுக்கு வாக்கியம்தான் காரணம். தவறான நட்சத்திரங்களையும், தவறான திதிகளையும் சொல்லி, நம்முடைய இளைய பருவத்தினரின் வாழ்க்கையை வாக்கியப் பஞ்சாங்கம் கெடுத்துக் கொண்டிருக்கிறது.

பருவ வயதுப் பெண்களை வைத்திருக்கும் ஜோதிட நம்பிக்கையுள்ள பெற்றோர்கள் வாக்கியத்தில் கணிக்கப்பட்ட ஜாதகத்தை வைத்து பெண்ணுக்கு பொருத்தம் பார்க்கவே பார்க்காதீர்கள். திருமண வாழ்க்கையை கெடுக்கும் செவ்வாய், சனி ஆகிய பாபக்கிரகங்களை வாக்கியப் பஞ்சாங்க ஜோதிடர்கள் ஜாதகத்தில் தவறாகப் போடுவதால்தான் ஒன்றுமறியாத பெண்களின் வாழ்க்கை கெடுகிறது.

உலகம் முழுக்க வாக்கியப் பஞ்சாங்கம் ஒழிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டைத் தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் கோவில் திருவிழாக்களும், குருப் பெயர்ச்சி, சனி, ராகு-கேது பெயர்ச்சிகளும் திருக்கணிதப்படிதான் கொண்டாடப்படுகின்றன. மகாபுனிதமான திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி போன்ற கோவில்களிலும் வாக்கியம் என்றைக்கோ ஒழிக்கப்பட்டு விட்டது. திருக்கணிதப்படிதான் அங்கே பெயர்ச்சி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டிலும் ஒரு நாள் அது நடக்கும்.

வாக்கியம் எவ்வளவு தவறானது என்பதற்கு அவர்கள் திருக்கணித கிரகண நேரத்தை அப்படியே காப்பியடித்து வெளியிடுவதே சாட்சி. வாக்கியம் சொல்லும் ராகு, கேது இருப்பு நிலையின்படி கிரகணம் வரவே வராது. வாக்கியப் பஞ்சாங்கத்தில் உள்ளது திருக்கணித கிரகண நேரம்.

ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முன் காஞ்சிக்கடவுளான ஸ்ரீமகா பெரியவர் வாக்கியத்தை திருத்த, ஒழிக்க ஒரு முயற்சி எடுத்தார். அது சரிவராமல் போகவே சகல வேதங்களும் அறிந்த அந்த மகான் அன்று முதல் காஞ்சி மடத்தில் வாக்கியத்தை நிறுத்தி, திருக்கணிதத்தை பின்பற்ற ஆணையிட்டு அன்று முதல் ஸ்ரீமடத்தில் திருக்கணிதம்தான் செயல்பாட்டில் இருக்கிறது.

வாக்கிய பஞ்சாங்கத்தை ஆதரிப்பவர்கள், ஞானிகள் சொன்னது வாக்கியம், மனிதன் உருவாக்கியது திருக்கணிதம் என்ற தவறான பிரச்சாரத்தை நம்பி கண்மூடித்தனமாக அதை ஆதரிக்கிறார்கள். பஞ்சாங்கம் எப்படி எழுதப்படுகிறது என்பது இந்த ஜோதிடர்களுக்கு தெரியாது. தெரிந்தால் வாக்கியம் எவ்வளவு தவறானது என்பதை புரிந்து கொள்வார்கள். உண்மையில் இன்றைக்கு வாக்கியப் பஞ்சாங்கம் வெளியிடுபவர்களுக்கு பஞ்சாங்கம் கணிக்கத் தெரியாது. யாரோ ஒருவர் எழுதிக் கொடுப்பதை இவர்கள் பெயரில் வெளியிடுகிறார்கள்.

ஆதிகாலத்தில் பராசரர், வராகமிகிரர் போன்ற ஞானிகள் அருளியது திருக்கணிதம்தான். இடையில் வந்த வரருசி என்பவர் (வர ரிஷி இல்லை) அன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப வாக்கியத்தை சொன்னார். அதையும் அவ்வப்போது ஏற்படும் கிரக மாறுதல்களுக்கு ஏற்ப திருத்திக் கொள்ள சொன்னார். ஆனால் காலம் காலமாக வாக்கியம் திருத்தப்படாமல் விடப்பட்டு இன்று திருத்தவே முடியாத தவறான நிலையில் வந்து நிற்கிறது.

சமீபத்தில் ஆந்திராவில் எழுந்த எதிர்ப்பால், அங்கே வாக்கிய பஞ்சாங்கம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, சூரியனையும், சந்திரனையும் மட்டும் வாக்கியத்தில் வைத்துக் கொண்டு மற்ற கிரகங்களை திருக்கணிதத்தில் கணித்து சித்தாந்த பஞ்சாங்கம் என்ற வகையில் வெளியிடப்பட்டு வருகிறது. தமிழத்திலும் வாக்கியம் கைவிடப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை.

உங்களின் ஜாதகப்படி மேஷ லக்னத்திற்கு வரக்கூடாத, ஆறுக்குடைய புதன் தசை 2015ம் ஆண்டு வரை நடந்ததால் உங்களுக்கு எவ்வித முன்னேற்றமும் கடந்த காலங்களில் இருந்திருக்காது. அதிலும் ஆறுக்குடைய புதன் நீசமாகி, பாபத்துவம் பெற்று எட்டுக்குடைய செவ்வாயுடன் இணைந்து, ஆறாம் இடத்தையே பார்ப்பதால், கடந்த பதினைந்து ஆண்டு காலம் உங்களுக்கு முன்னேற்றம் இல்லாமல் போயிருக்கும்.

தற்போது நடக்கும் கேதுதசை குருவின் பார்வையில் இருப்பதால் பிற்பாதியில் நன்மைகளைத் தரும். இதனை அடுத்த சுக்கிரதசை ராசிநாதன் தசை என்பதாலும், அவயோக கிரகங்கள் 3, 6, 10, 11ல் நன்மை செய்யும் என்கின்ற விதிப்படி பத்தாம் இடத்தில் அமர்ந்து ,நான்காம் அதிபதி சந்திரனின் சாரம் பெற்றிருப்பதாலும் நல்ல பலன்களைத் தரும். வாழ்க்கையில் 56 வயதிற்கு மேல் சுக்கிர தசை வருவது ஒரு யோகம். எனவே அந்திமகாலத்தில் சிரமப்படாமல் நன்றாக இருப்பீர்கள்.

வாழ்த்துக்கள்.

எஸ். கண்ணன், ஜூரிச், சுவிட்சர்லாந்து.

கேள்வி :

சுவிட்சர்லாந்தில் வசிக்கிறேன். இங்கே குடியுரிமை கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. நீதிமன்றம், வக்கீல் என்று அதிக பணச்செலவும் அலைச்சலும் இருக்கிறது. மனைவியும் வாழ விருப்பமில்லை என்று விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். பிள்ளைகளும் இல்லை. புத்திரகாரகன் குரு ஐந்துக்குடையவன் ஆகி வக்ரமாக உள்ளதால் திருமணம் விவாகரத்தில்தான் முடியுமா? இரண்டாவது திருமண அமைப்பு இருக்க இருக்கிறதா? நடக்குமெனில் எப்போது? புத்திர பாக்கியம் உண்டா? வெளிநாட்டுக் குடியுரிமை கிடைத்து சுவிட்சர்லாந்திலேயே இருப்பேனா அல்லது இலங்கைக்கு திரும்ப வேண்டியிருக்குமா? நான் நம்பிய அனைவரும் எனக்கு துரோகம் மட்டுமே செய்திருக்கிறார்கள். இதற்கு என்ன செய்ய வேண்டும்? பரிகாரம் எதுவும் இருக்கிறதா?

பதில் :
சந் ரா சூ பு சுக்
21.6.1984 காலை 11.45 யாழ்ப்பாணம்
குரு கே செ சனி

உங்களுடைய பிறந்த நேரத்தில் தவறு இருக்கிறது. நீங்கள் அனுப்பியுள்ள காலை 11-45 மணிக்கு சிம்ம லக்னம் வருகிறது. இந்த ஜாதக அமைப்பின்படி தற்போது நீங்கள் வெளிநாடு வந்திருக்க வாய்ப்பில்லை. லக்னத்திற்கு எட்டில், பன்னிரெண்டாம் அதிபதி தேய்பிறைச் சந்திரன் அமர்ந்து, 8, 12ஆம் இடங்கள் சுபத்துவமாக இல்லாத ஒருவரால் வெளிநாடு வந்திருக்க முடியாது.

கடந்த சில வருடங்களாக மிகவும் சிரமப்படுவதாகவும் சொல்லியிருக்கிறீர்கள் அதுவும் சரி வரவில்லை. நடந்து கொண்டிருக்கும் பதினொன்றாம் அதிபதி புதன் ஆட்சி பெற்று, குருவின் பார்வை பெற்ற நிலையில், யோகாதிபதி செவ்வாயின் நட்சத்திரத்திலும் இருப்பதால் உங்களுக்கு கஷ்டங்களை தந்திருக்கவும் வாய்ப்பு இல்லை.

இன்னும் இரண்டு நிமிடம் கழித்து 11-47 க்கு லக்னம் மாறுகிறது. அதன்படி நீங்கள் மூன்று நிமிடம் கழித்து பிறந்திருப்பதாக கொண்டால், உங்கள் லக்னம் கன்னியாகி 8, 12 ஆம் இடங்களை வலுப்பெற்ற குரு பார்த்து, எட்டாம் அதிபதி செவ்வாய் சுபர் வீட்டில் அமர்ந்து எட்டாம் வீட்டை பார்த்து, பன்னிரெண்டாம் அதிபதி சூரியனும் சுபத்துவமாக குருவின் பார்வையில் இருக்க, அஷ்டமாதிபதி செவ்வாயின் சாரம் பெற்ற லக்னாதிபதி புதன் தசையில் வெளிநாட்டில் வந்து நீங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பது சரியான பலன்களாக இருக்கும்.

என்னுடைய கணிப்பின்படி நீங்கள் 11-45 க்கு பிறந்திருக்க முடியாது. பெரியவர்களிடம் கேட்டு பிறந்த நேரத்தை உறுதி செய்து கொள்ளவும். அதேபோல கன்னி லக்னம் என்றால்தான் இரண்டில் செவ்வாய், சனி, ராசிக்கு எட்டில் செவ்வாய், சனி என்றாகி உங்களுடைய திருமண வாழ்க்கையும் தற்போது முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கும்.

மனைவியின் ஜாதகப்படி அவருக்கு அஷ்டமாதிபதி சந்திரனின் தசை நடந்து கொண்டிருப்பதால் இனி சேர்ந்து வாழ இயலாது. அடுத்த வருடம் மார்ச் மாதம் ஆரம்பிக்கும் கேதுதசை முதல் உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் இருக்கும். கேது 5க்குடைய சனியின் சாரம் பெற்று இருப்பதால் குடியுரிமை மற்றும் இன்னொரு புதிய வாழ்க்கையைத் தருவார்.

லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய், சனி ராசிக்கு எட்டில் செவ்வாய், சனி என்ற அமைப்புள்ள உங்களுக்கு 35 வயதிற்கு முன்னதாக திருமணம் நடந்தால் பிரிய வேண்டும் என்பது விதி. கேதுதசை முதல் நன்றாக இருப்பீர்கள். லக்னாதிபதி புதனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 206 (25.09.18)

  1. வர்கோத்தமம் அடைந்த கிரகம் எப்போதும் நன்மை செய்யுமா? அல்லது பாவத்திற்கு லக்னத்திற்கு ஏற்றவாறு பலன் அமையுமா? ராகு கேது வர்கோத்தமம் பெற்றால் என்ன பலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *