adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
மகளுக்கு பிடிக்காத திருமணம் நடக்குமா? -குருஜியின் விளக்கம்.

கே.எல். லட்சுமி, கரூர்.

கேள்வி :
தகப்பனுக்கு தகப்பனாய், குருவிற்கு குருவாய் என் போன்ற ஜனங்களுக்கு வழி காட்டும் தெய்வத்தின் திருப்பாதங்களுக்கு வணக்கம். முதலையும், மூர்க்கனும் கொண்டதை விடாது என்ற பழமொழிக்கேற்ப, பிடித்தால் விடாத புருஷனுக்கு நான் வாழ்க்கைப் பட்டிருக்கிறேன். கல்யாண நாள் முதல் தினமும் குடித்து விட்டு வரும்     புருஷனிடம் அடிவாங்கி அடிவாங்கி மூன்று பிள்ளை பெற்று இருக்கிறேன்.

வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் கஷ்டம் வரலாம், வாழ்க்கையே கஷ்டமாகிப் போனதால் மனமும் உடலும் மரத்துப் போய்விட்டது. திருந்தாத ஜென்மம் என்ற ஒன்று இருந்தால் அது என் புருஷன்தான். என் வாழ்க்கையில் விளையாடி நாசமாக்கியது போல இப்போது என்     பெண்ணையும் கட்டிக் கொடுக்கிறேன் என்ற போர்வையில் நாசமாக்கப் போகிறான். படித்துக் கொண்டிருக்கும் என் மகளை, சொத்துக்காக பத்தாவது கூட படிக்காமல், என் புருஷனைப் போலவே குடித்துக் கொண்டு திரியும் ஒருவனுக்கு சென்ற வாரம் நிச்சயம் செய்து விட்டான். கல்யாணம் இப்போது வேண்டாம் என்று மகள் காலில் விழுந்து கதறியும் மகளைப் போட்டு அடிக்கிறான். இவனுடைய கோபத்தையும், குணத்தையும் தெரிந்து ஊரில் ஒருவர் கூட எதிர்த்துக் கேட்க நாதியில்லை. எதையாவது அரைத்துக் குடித்துவிட்டு சாகலாம் என்றால் நான் இருக்கும்போதே இந்தப் பாடுபடும் என் பெண்கள். நான் செத்து விட்டால் என்னவாகுமோ என்ற பயம் நெஞ்சைக் கவ்வுகிறது. நிச்சயமான நாள் முதல் மகள் அழுது கொண்டே இருக்கிறாள் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை. என்ன நடக்கும் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். வரும் கார்த்திகை மாதம் மகளுக்குப் பிடிக்காத இந்த திருமணம் நடக்குமா? நடந்தால் மகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்? உங்களின் வாக்கு என் தெய்வத்தின் வாக்காக இருக்கும்.

பதில் :
குரு சுக் சனி சூ பு செ
கே
3-6-1998, மாலை 4-20 கரூர்
ரா
சந்
மனம், மிகுந்த சங்கடத்துக்கு உள்ளாகும் சில நேரங்களில் ஏன்தான் ஜோதிடம் தெரிய வந்ததோ என்று என்னை நானே நொந்து கொள்வேன். அந்த நேரம் இப்போது வந்திருக்கிறது.
கசப்பான எதையும் வெளிப்படையாகச் சொல்லாமல் பூடகமாகச் சொல்லிப் புரிய வைத்து பழக்கப்பட்ட நான், கசப்பை மட்டுமே உனக்கு பதிலாகத் தர வேண்டி இருக்குமே என்பதால் உன் கடிதத்தை தவிர்த்துவிட வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஆன்மாவை கொட்டி நீ எழுதியிருக்கும் கடிதத்திற்கு பதில் தர வேண்டியது, விருப்பு வெறுப்பற்றவனாக இருக்க வேண்டிய ஒரு ஜோதிடனின் கடமை என்பதால் உனக்கு பதில் தரும் சங்கடத்திற்கு உள்ளாகி இருக்கிறேன்.
மகளே... பெண்ணாய்ப் பிறந்தவளுக்கு இந்த மண்ணில் காலங்காலமாக தொடர்ந்து வரும் சாபக்கேடு இது. நீதான் படிக்கவில்லை, உன் பெண்ணை படிக்க வைத்திருக்கிறாய் அல்லவா? என்னிடம் ஏன் வந்து புலம்புகிறாய்? உன் காலம் வேறு. இந்தக் காலம் வேறு. ஆணை விட பெண்கள் படித்து சொந்தக்காலில் நிற்கும் இக்காலத்தில் ஒரு வயது வந்த பெண்ணை விருப்பமில்லாமல் யாருக்கும் திருமணம் செய்து வைக்க முடியாது. வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் கோழையாக இருந்தால் வாழவே முடியாது.
என்றாவது ஒருநாள் உள்ளுக்குள் இருக்கும் வீரத்தை வெளிக்காட்டித்தான் ஆக வேண்டும். ஜோதிடம் இரண்டாம் பட்சமாக இருக்கட்டும். முதலில் தைரியமாக ஒரு முடிவு எடு. மகளுக்கு இஷ்டமில்லாத திருமணத்தை நிறுத்த முயற்சி செய். சட்டம் இப்போது பெண்களுக்கு சாதகமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது. விருப்பம் இல்லாத திருமணத்தை செய்து வைக்க அப்பன் இல்லை, ஆண்டவனே வந்தாலும் நடக்காது. மகளின் திருமணத்தை நிறுத்த நீ சட்ட உதவி உட்பட எவரை வேண்டுமானாலும் உதவி கேட்கலாம்.
இதுவரை ஒன்றுமறியாத ஒரு குழந்தையின் வாழ்க்கை கெட்டுவிடக் கூடாதே என்று சக மனிதனாக பதில் சொன்ன நான், ஒரு ஜோதிடனாக உன் மகளின் எதிர்காலத்தை பற்றி நீ கேட்டிருக்கும் கேள்விக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
லக்னத்திற்கு ஏழில் நீசச் சனி, எட்டில் செவ்வாய், ராசிக்கு எட்டில் சனி,சுக்கிர சேர்க்கையோடு, அடுத்து ராகு திசையில், துலாம் லக்ன பாவியான குருவின் சஷ்டாஷ்டக புக்தி வரவிருக்கும் ஒரு பெண்ணிற்கு இருபது வயதில் திருமணம் செய்வதை போல முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை. ஆயினும் கர்மா என்ற ஒன்று இருக்கிறதே. தலையெழுத்துப்படிதான் எதுவும் நடக்கும்.
எனக்கு கடிதம் எழுதியதில் இருக்கும் தைரியம் உனக்கும், உன் பெண்ணிற்கும் செயலில் இருக்காது. பலவித சமூக நிர்ப்பந்தங்களில் நீங்கள் இருப்பீர்கள். ஒன்பதாம் அதிபதி புதனும், பிதுர்க்காரகன் சூரியனும் எட்டில் செவ்வாயுடன் இணைந்த நிலையில், சிம்மத்தில் அமர்ந்த சுபத்துவமும், சூட்சும வலுவும் பெறாத ராகுவின் தசை பருவத்தில் நடப்பதால், உன் பெண்ணிற்கு தகப்பனே எதிரியாகத்தான் இருப்பான். தகப்பனால்தான் இந்தப் பெண்ணின் வாழ்க்கை கெட வேண்டும் என்பது விதி.
ஜாதகப்படி ராகு அம்சத்தில் சுக்கிரன், குருவுடன் இணைந்ததாலும், ராகுவிற்கு வீடு கொடுத்த சூரியன், சுக்கிரனின் வீட்டில் அமர்ந்ததாலும், வரும் கார்த்திகை மாதம் ராகுதசை, ராகுபுக்தி, சுக்கிரனுடன் சேர்ந்த நீசசனியின் அந்தரத்தில் இந்தப் பெண்ணிற்கு திருமணம் நடந்துதான் தீரும். திருமணத்தை நிறுத்தும் தைரியம் உனக்கு இருக்காது. ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பதன்படி உன் அழுகுரல் யார் காதிலும் கேட்கப் போவதில்லை.
இரண்டு வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகி, ராகுவிற்கு எட்டில் சஷ்டாஷ்டகமாக அமர்ந்திருக்கும் குருவின் புத்தியில், மகளின் வாழ்க்கையில் சட்டச் சிக்கல்கள் வரும். பிரிவினை இருக்கும். இன்னும் சில வாரங்களில் திருமணமாக இருக்கும் ஒரு ஒன்றுமறியாத குழந்தையின் எதிர்காலம் பற்றி இதற்கு மேல் அபசகுனமாக சொல்ல என் மனம் தடுமாறுகிறது. இரண்டாம் திருமணத்தை குறிக்கும் பதினொன்றாம் வீட்டில் பாபத்துவ அமைப்பில் ராகு இருப்பதால் யாரையாவது கேள். எதையாவது செய்.

(04.09.2018 மாலை மலரில் வெளிவந்தது.)

One thought on “மகளுக்கு பிடிக்காத திருமணம் நடக்குமா? -குருஜியின் விளக்கம்.

  1. குருஜி அவர்களே

    தங்கள் கட்டுரைகளில் ராகு துலா லக்கினத்திற்கும்( கன்னி ரசிக்கும்) நட்பு கிரகம். கெடு பலன்கள் இருக்காது என்றும் ஐந்து பதினொன்றில் உள்ள ராகு நல்ல பலன்களை அளிப்பார் என்றும் கூடியதை நினைவு கூறுகிறேன் .
    அதே போல் ராஜ யோகாதிபதி சனியுடன் லக்கினாதிபதி சுக்கிரன் எழில் உள்ள அமைப்பால் ஒரு வேலை இந்த திருமணம் நடந்தாலும் இந்த பெண் வாழ்க்கை நிச்சயம் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

    சுபத்துவமான சனி திக்பாலம் பெற்று அம்சத்தில் நட்பு பெற்று உள்ளார்.

    ராகு சுபகர்தாரி யோகத்தில் உள்ளார். (வளர் பிறை சந்திரன் மற்றும் குரு பார்வை)

    துலா லக்கினத்திற்கு குரு பார்த்த ராகு தசை நன்மை தராது என்று கூறி இருக்கிறீர்கள்.

    ராசிக்கு எழில் குருவும், லக்கினத்திற்கு எழில் சுக்கிரனும் இருப்பதால் தங்கள் பதில் எனக்கு சற்று வியப்பை தருகிறது.

    ஒருவேளை இந்த தாய் கூறிய படி இவருக்கு பார்த்திருக்கும் மாப்பிளை குடி காரனாக இருந்தாலும் இந்த பெண்ணால் திருந்தி வாழ்வான் என்றும் நம்புவோம்.

    மாப்பிள்ளை ஜாதகம் பார்க்காமல் தங்கள் இது போன்று கூறி இருப்பதால் உங்கள் பார்வையில் இந்த ஜாதகம்

    அவயோகமானதாக பட்டதற்கு துல்லியமாக விளக்கம் அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் .

    ராகுவும் கேதுவும் சார பரிவர்த்தனை பெற்றிருப்பதால் அப்படி கூறி இருந்தாலும் நீங்களே ராகு கேது தான் இருக்கும் வீட்டு அதிபதியாக முதன்மையான பலனை தருவார் என்று விளக்கி இருக்கிறீர்கள்.

    எட்டில் செவ்வாய் சுபர் வீட்டில் லக்கின சுபர் புதனுடன் லக்கினாதிபதி சுக்கிரனுடன் பரிவர்த்தனை ஆகி உள்ளது. ஆகையால்

    பாக்கியாதிபதி புதன் லக்கினத்திற்கு எட்டில் மறைந்தாலும் ராசிக்கு ஒன்பதில் நட்பு பெற்று இருக்கிறார்.

    ஓரளவிற்கு புத்தியுள்ள பெண்ணாகவே இருக்கக்கூடும் எனவே இந்த கருத்துக்களில் தவறு இருந்தால் சுட்டி காட்டுமாறு கேட்டு கொள்கிறான். தங்கள் கட்டுரை மூலமாக அறிந்த வற்றை ஒப்பிட்டு இந்த சந்தேகங்களை எழுப்பி இருக்கிறேன் . தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *