adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 201 (21.08.18)
எஸ். உஷாராணி, கோவை.
கேள்வி :
திருமணமாகி பத்து வருடம் ஆகிறது. அத்தை மகனைத்தான் மணம் முடித்திருக்கிறேன். கணவருக்கு நிரந்தர வேலை இல்லை. ஒன்றரை வருடங்களுக்கு முன் கணவரின் உடன் பிறந்த சகோதரர் இறந்துவிட்டார். அதன்பிறகு மாமனாரின் அண்ணி ஆறு மாதங்களுக்கு முன் இறந்தார். கடந்த மே 9-ஆம் தேதி என் மாமனாரும் இறந்துவிட்டார். ஒன்றரை வருடத்தில் மூன்று இறப்புகள் குடும்பத்தில் நடந்துவிட்டது. மிகவும் வேதனையாக உள்ளது. எனக்கும் கணவருக்கும் இரவில் கெட்ட,கெட்ட கனவு வந்து பயமுறுத்துகிறது. தூங்கவே பயமாக உள்ளது, ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் பார்த்ததில் அவர் வேறு வீட்டில் இன்னும் ஒரு துக்கம் நடக்கும் என்று பயப்படுத்துகிறார். பரிகாரம் செய்ய ரூபாய் 20,000 ஆகும் என்றும் சொல்லுகிறார். நிம்மதி இல்லாமல் தவிக்கிறோம். எங்கள் வீட்டில் இன்னொரு இறப்பு இருக்குமா?
பதில் :
கே
சந்
20.8.1978 மதியம் 1.54 மேட்டுப்பாளையம்
குரு
சூ பு சனி
சுக் செ ரா
உலகில் ஜனனமும், மரணமும் நடக்காத ஒரு இடத்தை சொல்லு அம்மா.... பிறகு உன் வீட்டில் இன்னொரு இறப்பு இருக்குமா என்பதைப் பார்க்கலாம். பிறப்பும் இறப்பும் இல்லாத வீடு உலகில் எங்கே இருக்கிறது? எல்லோருடைய வீட்டிலும் சுகமும், துக்கமும் கலந்துதானே இருக்கிறது?
கணவரின் சகோதரர் வேண்டுமானால் இளம்வயதில் இறந்திருக்கலாம். அவர் அற்பாயுளில் இறந்ததது சோகம்தான். ஆனால் உன்னுடைய மாமனாரின் அண்ணி மற்றும் மாமனார் இருவரும் முதிர்ந்த வயதில்தானே இறந்திருக்கிறார்கள்? முதுமையில் இறப்பு வரத்தானே செய்யும்? நீயும், நானும் ஒருநாள் இந்த உலகை விட்டு போகத்தானே போகிறோம்? யாரும் இங்கே நிரந்தரம் இல்லையே? போகும் நாள் முன்பின்னாக இருந்தாலும் அனைவரும் ஒருநாள் இந்த உலகைவிட்டு சென்றுதானே ஆகவேண்டும்? போனவர்களைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டு இருக்காமல் இருப்பவர்களை நினைத்து சந்தோஷமாக இரு கணவரின் ஜாதகப்படி விருச்சிக லக்னத்திற்கு வரக்கூடாத புதன் தசை கடந்த 17 வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. அஷ்டமாதிபதி தசையில் எந்தவிதமான விருத்தியும் ஏற்படாது என்பது ஜோதிட விதி. வரும் அக்டோபர் மாதம் மாதத்துடன் பதினேழு வருடமாக உன் கணவனுக்கு நன்மை தராத புதன் தசை முடிவடைகிறது.
எட்டுக்குடையவன் தசையில் கலக்கமும், மனபயமும் இருந்துதான் தீரும். தூக்கம் வராது. அக்டோபர் மாதத்துடன் புதன் தசை முடிவடைவதால் இனிமேல் உன் வீட்டில் துக்கமோ, சங்கடமோ இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. இன்னும் சில காலத்திற்கு உன் வீட்டில் கெடுதல்கள் இல்லை. வரும் தீபாவளி முதல் உன்னுடைய வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். கணவரின் ஜன்ம நட்சத்திரத்தன்று கும்பகோணம் அருகில் இருக்கும் வைத்தீஸ்வரன் கோவில் சென்று வழிபட்டு வா. இனிமேல் நன்றாக இருப்பாய் அம்மா. வாழ்த்துக்கள்.
எம். மணிகண்டன். கோவை-45.
கேள்வி :
கடிதத்தை எழுதும்போது மிகவும் தயக்கத்துடனும், கஷ்டத்துடனும் எழுதுகிறேன். நான் என்னுடைய வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொள்ளவில்லை. அது எனது கர்மாவா அல்லது நேரமா என்றும் தெரியவில்லை. ஒன்றுக்கு இரண்டு திருமணம் செய்தும் வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினைகளையும், அசிங்கம், அவமானங்களையும் சந்தித்து வருகிறேன். இதில் என்னுடைய தவறு என்று சொல்லப் போனால் எல்லோரையும் நம்பியதுதான். முதல் திருமணத்தில் அந்தப் பெண் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார். பணம் இருக்கும்வரை என்னுடன் இருந்தவர், நான் கடனாளி ஆனவுடன் என்னை விட்டு பிரிந்து இன்னொருவரை திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது பெண் தனக்கு ஒரு பெண்குழந்தை இருப்பதையும், தான் விபச்சாரம் செய்ததையும் மறைத்து என்னைத் திருமணம் செய்துகொண்டார். இவர் செய்யும் பிரச்சினைகளால் எல்லோர் முன்பும் கேவலப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இரண்டாவது திருமணத்தால் எனது தந்தையை இழந்து விட்டேன். தாயாரையும் இழந்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. இந்தப் பெண்ணிடமிருந்து எனக்கு விடுதலை கிடைக்குமா? சினிமாவில் நல்ல இடத்தில் வரமுடியுமா? தங்களது பொற்பாதங்களை சரணடைகிறேன். ஆசி கூறுங்கள்.
பதில் :
ல சந்
13.11.1981 இரவு 7.40 கோவை
ரா
கே செ
சுக் கு சூ பு சனி
ஏழாமிடத்திற்கு பாபக் கிரக தொடர்புகள் இருந்தாலே திருமண வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. ஜாதகப்படி ராசி, லக்னம் இரண்டும் ஒன்றாகி ஏழாமிடத்தை சுபத்துவமற்ற செவ்வாய், சனி இருவரும் பார்க்கிறார்கள். பெண்களைக் குறிப்பவரும், லக்னாதிபதியுமான சுக்கிரன் எட்டாமிடத்தில் பரிவர்த்தனையாகி ஆறு, எட்டுக்குடையவர்களின் பரிவர்த்தனை ஜாதகத்தில் இருக்கிறது.
கடந்த இரண்டு வருடங்களாக எட்டுக்குடையவன் தசையில் ஆறுக்குடைய சுக்கிர புக்தி நடந்து கொண்டிருக்கிறது. ஆறு, எட்டுக்குடையவர்கள் தசா, புக்திகள் நடக்கும் போது ஒரு மனிதனுக்கு கடுமையான பிரச்சினைகளும், மானம் போகின்ற அளவிற்கு அசிங்கம், கேவலம் மற்றும் இழப்புகள் இருக்கும். தசா, புக்திதான் ஒத்துழைக்கவில்லை என்றாலும், கோட்சார நிலையிலாவது நல்லவை இருக்கிறதா என்று பார்த்தால், உங்களுடைய ரிஷப ராசிக்கு தற்போது அஷ்டமச்சனியும் நடந்து கொண்டிருக்கிறது. ஆக குதிரை கீழே தள்ளி, குழியும் பறித்த கதைதான் கடந்த இரண்டு வருடங்களாக உங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது.
ஜாதகப்படி எத்தனை திருமணம் செய்தாலும் மனைவி விஷயத்தில் நிம்மதி கிடைக்க வாய்ப்பு இல்லை. புதன், சனி இரண்டும் பாபத்துவ அமைப்பில் இருப்பதால் உங்களிடம் பெண்தன்மை சற்று தூக்கலாக இருக்கக்கூடும். பிரச்சனைகளை சமாளிக்க பயந்தவராக நீங்கள் இருப்பீர்கள். இன்னும் இரண்டு வருடங்களுக்கு குடும்பத்திலும், தொழிலிலும் எவ்வித முன்னேற்றமும் இருக்கப் போவதில்லை. பொறுமையாக இருங்கள். அஷ்டமச்சனி முடிந்ததும் ஒரு வழி பிறக்கும். சனிக்கிழமைதோறும் அருகில் இருக்கும் பழமையான கோவிலில் அருள் பாலிக்கும் காலபைரவருக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுங்கள் அடுத்த வருடம் ஏப்ரலுக்கு பிறகு மனைவி விஷயத்தில் மாறுதல்கள் வரும். 2020ஆம் ஆண்டு முதல் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்.வாழ்த்துக்கள்.
வி. சங்கீதா. ஈரோடு-5.
கேள்வி :
ஐ.டி கம்பெனியில் பணியாற்றுகிறேன், எனது திறமை மற்றும் கடின உழைப்பால் நான் செய்யும் ப்ராஜெக்டில் என் பெயரைச் சேர்க்காமல், வேலையில் எந்தத் திறமையும், தகுதியும் இல்லாத என்னுடன் பணியாற்றும் ஒருவர் என்னால் பெயர் எடுக்கிறார். என் உழைப்பு திருடப்படுகிறது. மேலதிகாரிக்கு அந்த நபர் ஜால்ரா போட்டு ஐஸ் வைக்கிறார். கஷ்டப்பட்டு நான் செய்த என்னுடைய பிராஜெக்ட்டை அவர் செய்வதாக மேலதிகாரி சொல்வதால் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்தேன். எனக்கு கிடைக்கவேண்டிய அனைத்து கிரெடிட்டும் மற்றவர்களுக்குத்தான் செல்கின்றன. மனம் நொந்த நிலையில் கடந்த மாதம் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். வேறு கம்பெனிக்கு முயற்சி செய்கிறேன். நல்ல வேலை கிடைக்குமா? எப்போது? திருமணம் எப்போது நடக்கும்?
பதில் :
செ
4.1.1991 காலை 8.18 ஈரோடு
கு கே
ல சுக் சனி ரா சந்
சூ பு
மகர லக்னமாகி எட்டுக்குடைய சூரியதசை இப்போது உனக்கு நடந்து கொண்டிருக்கிறது. இளம்வயதில் அஷ்டமாதிபதி தசை வந்தாலே வயதுக்குரிய எதுவும் நடக்காமல், கடுமையான மன அழுத்தம் தரும் சம்பவங்கள் மட்டுமே இருக்கும். ஜாதகப்படி கடந்த நான்கு வருடங்களாகவே உன்னுடைய சொந்த வாழ்க்கை, வேலை இரண்டிலுமே கடுமையான பிரச்சினைகள் இருக்கும். உலகமே உனக்கு எதிராகவும் இருக்கும்.
லக்னாதிபதி சனி பாதிக்கப்பட்டிருப்பதால் சூரிய தசை முழுக்க ஆண்களால் உனக்கு ஏமாற்றம் இருக்கும். யாரையும் நம்பாதே. சனி தசையில் சூரிய புக்தியும், சூரிய தசையில் சனி புக்தியும் நன்மைகளைச் செய்யாது என்று அடிக்கடி எழுதி வருகிறேன். தற்போது உனக்கு சூரிய தசையில், சனி புக்தி நடந்து வருகிறது. வரும் அக்டோபர் மாதம் இறுதிவரை உனக்கு மனக்கஷ்டத்தை கொடுக்கும் அமைப்பு நடக்கிறது. நவம்பர் முதல் நல்லவை உண்டு.
ஜாதகப்படி எட்டுக்குடையவன் 12-ல் அமர்ந்து தசை நடத்துவதால் உனக்கு இப்போது இருக்கும் இடத்தை விட்டு வெளிமாநிலங்களில் இதைவிட நல்ல வேலை கிடைக்கும். கஷ்டங்கள் தீரும் நேரத்தில், எல்லோருக்கும் அப்போதிருக்கும் அமைப்பை விட்டு மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். அது இப்போது உனக்கு நடந்து கொண்டிருக்கிறது. எனவே நீ வேலையை விட்டது நல்லதுதான். கவலைப்படாதே. அடுத்த வேலை இதைவிட நல்லதாக உனது திறமைக்கு ஏற்றதாக இருக்கும்.

அடுத்த புதன் புக்தி முதல் உன் வாழ்க்கையில் நல்லவை நடக்க ஆரம்பிக்கும். சுக்கிரன் கெட்டு கடுமையான தோஷ அமைப்புகள் இருப்பதால் 28 வயதுவரை உனக்கு திருமணம் நடக்கக் கூடாது. தாமத திருமணம் உனக்கு நல்லது. சூரிய தசை இறுதியில் சுக்கிர புக்தியில் திருமணம் நடக்கும். திருமணத்திற்கு பிறகு நல்ல வேலை, நல்ல கணவன் என்று வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பாய். வாழ்த்துக்கள்.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 201 (21.08.18)

  1. எனக்கு ஆண் குழந்தை பிறக்கும் பாக்கியம் உண்டாகுமா அது எப்பொழுது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *