ஒரு மனிதனின் அறிவிற்கும், ஞானத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் காரணமான கிரகம் வித்யா காரகன் எனப்படும் புதன்.
ஒருவர் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்றால் அவரது ஜாதகத்தில் கண்டிப்பாக புதன் வலுப் பெற்று இருக்க வேண்டும். ஒரு குழந்தை பிறந்தவுடன் ஜாதகத்தைக் கணிக்க வரும் பெற்றோர். முதலில் கேட்கும் கேள்வி என் குழந்தை என்ன படிப்பான் என்பதுதான். அந்தப் படிப்புக்குக் காரணமானவன் புதன்.
புதனைப் பற்றிக் குறிப்பிடும் பழமொழிகளில் “பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என்ற முதுமொழி, பொன் எனப்படும் ஜோதிடத்தின் பொன்னவனான. குரு தரும் பணம் மற்றும் குழந்தைச் செல்வம் ஒருவருக்குத் தாராளமாகக் கிடைத்தாலும், புதன் தரும் அறிவுச் செல்வம் அவருக்கு சுலபத்தில் கிடைக்காது என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்படுகிறது.
இவ்வுலகில் இதுவரை கண்டு பிடிக்கப்பட்ட மற்றும் இனிமேல் அறியப் போகும் அனைத்துக் கண்டுபிடிப்புகளுக்கும் சொந்தக்காரர் புதன்தான். நவீன விஞ்ஞானிகளை உருவாக்குபவரும் இவர்தான்.
அறிவால் உலகத்தை ஆட்டுவிப்பவர் என்பதால் இந்திய வேத ஜோதிடத்தில் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் உள்ளவர் எனும் அர்த்தத்தில் இவர் நிபுணன் என்று புகழப்படுகிறார்.
ஒருவருடைய ஜாதகத்தில் புதன் மட்டும் வலுவாக இருந்தால் போதும். எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் அந்த ஜாதகர் தன்னுடைய அறிவின் மூலமாக தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அடுத்தவர் துணையின்றி முன்னேறி விடுவார்.
எல்லா வகையிலும் புதன் ஒரு தனித்துவமுள்ள கிரகமாவார். அவருடைய சுப, அசுப நிலைகளும் அப்படிபட்டவை. இதனால்தான் நமது மூலநூல்களில் எவருடனும் சேராமல் தனித்திருக்கும் புதன் மட்டுமே முழுச் சுபராகச் சொல்லப்பட்டுள்ளது.
சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் புதன் என்பதால் பூமி மையக் கோட்பாட்டின்படி நம்முடைய பார்வைக் கோணத்தில் எப்போதும் சூரியனுடன் இணைந்தே இருப்பார். அதாவது பூமியிலிருந்து நாம் பார்க்கும்போது புதன் சூரியனுக்கு அருகிலேயே இருப்பார்.
மிக அபூர்வமான சூழ்நிலையில் வருடத்தில் சில வாரங்கள் மட்டும் அவர் சூரியனை விட்டு விலகி முன்பின் ராசிகளில் இருப்பார். இதுபோன்று சூரியனுடனோ, வேறு பாபக் கிரகங்களுடனோ சேராமல் இருக்கும் நிலையில் புதன் முழுச் சுபர் எனும் நிலை பெற்று மிகப் பெரிய நன்மைகளைச் செய்வார்.
வேறு எந்தக் கிரகத்துடனும் சேராமல் புதன் தனித்திருக்கும் நிலையில் அவரது பார்வைக்கு குருவுக்கு நிகரான சக்தி உண்டு. இதை என்னுடைய நீண்ட ஜோதிட அனுபவத்தில் அனேக ஜாதகங்களில் பார்த்திருக்கிறேன்.
புதனும், சூரியனும் இணையும்போது சூரியன் அந்த ஜாதகருக்கு யோகராக இருக்கும் நிலையில் புதன் அங்கே நன்மையை அளிப்பார் என்பதும் ஒரு சூட்சுமம். இதற்கு சூரியன் அவரது முதன்மை நண்பர் என்பது காரணம்.
ஏற்கனவே செவ்வாயின் சூட்சுமங்களில் நான் எழுதியதைப் போல உடலை இளமையாக வைத்து கொள்ள உதவுபவர் செவ்வாய் என்றால், மனதை இளமையான வைத்து கொள்ள உதவுபவர் புதன்.
புதன் வலுப்பட்டவர்கள் தன்னம்பிக்கையுடன் எதையும் “பாசிட்டிவ் அப்ரோச்” என்று சொல்லப்படும் நேர்மறை நிலையில் அணுகுவார்கள். எந்த சூழ்நிலையிலும் மனதைத் தளர விட மாட்டார்கள். எத்தனை தோல்விகள் வந்தாலும் அவற்றிலிருந்து அனுபவங்களைக் கற்றுக் கொண்டு, தோல்விகளை வெற்றியாக மாற்றுபவர்கள் புதனின் அருள் பெற்றவர்கள்தான்.
ஒருவர் சிறந்த பேச்சாளராகவும், பேச்சால் அடுத்தவர் மனதை மயக்குபவராகவும் இருப்பதற்கு புதனின் பலம் அவசியம். பெரிய வியாபாரிகள், மேடைப் பேச்சாளர்கள், பட்டிமன்ற நடுவர்கள், நகைச்சுவை நடிகர்கள், அறிவுப்பூர்வமான விவாதம் செய்பவர்கள், கணக்குத் துறையினர் உள்ளிட்ட பலர் புதனால் உருவாக்கப் பட்டவர்கள்தான்.
குஜாதி ஐவர்கள் என்று நமது கிரந்தங்களில் குறிப்பிடப்படும் குரு, சுக்கிர, புதன், செவ்வாய், சனி இவர்கள் ஐவரும் லக்னத்திற்கு கேந்திரங்கள் என்று கூறப்படும் 1,4,7,10-ல் ஆட்சியோ, உச்சமோ பெற்றால் அதனை பஞ்சமகா புருஷ யோகங்கள் என்று நமது ஜோதிட மூல நூல்கள் சிறப்பித்துச் சொல்கின்றன. இதில் புதன் தரும் யோகத்திற்கு பத்ர யோகம் என்று பெயர்.
சந்ததி விருத்திக்காக அனைவருக்கும் காமம் தேவைப்படுவதன் பொருட்டு காமத்திற்குக் காரணமான சுக்கிரன் மட்டும் அனைத்து லக்னக்காரர்களுக்கும் கேந்திரங்களில், ஆட்சியோ உச்சமோ பெறுவார். வேறு எந்தக் கிரகத்திற்கும் இந்த விசேஷமான அமைப்பு இல்லை.
(இதைப்பற்றி சில வருடங்களுக்கு முன் எழுதிய மாளவ்ய யோகம் பற்றிய கட்டுரையில் விளக்கியிருக்கிறேன். அடுத்து வரும் சுக்கிரனைப் பற்றிய விளக்கங்களில் இதை விரிவாகச் சொல்கிறேன்.)
அதுபோலவே குரு, செவ்வாய், சனி ஆகிய மூவரும் சரம், ஸ்திரம் ஆகிய எட்டு லக்னங்களில் பிறப்பவர்களுக்கு கேந்திரங்களில் ஆட்சி, உச்சம் பெற்று வலுவாகி யோகம் தருவார்கள்.
ஆனால் புதன் மட்டும் அரிதிலும் அரிதாக வெறும் நான்கு லக்னங்களுக்கு மட்டுமே, உபய லக்னங்களில் பிறப்பவர்களுக்கு மட்டுமே பத்ர யோகத்தை அளிப்பார். அதாவது வெறும் நான்கு லக்னங்களுக்கு மட்டுமே அவர் கேந்திரங்களில் ஆட்சி, உச்சத்தை அடைவார். இது ஒன்றே நவ கிரகங்களில் இவரது பெருமையையும் மனித வாழ்வில் அறிவின் அத்தியாவசியத்தையும் காட்டும்.
படைப்புக் கடமைக்காக அனைவருக்கும் காமம் தரப்படுகின்ற நிலையில் அறிவு மட்டும் பூர்வ ஜென்ம கர்ம வினையைப் பொருத்து, வெகு சிலருக்கு மட்டுமே தரப்படுகிறது. நம்மில் சிலர் மட்டுமே மிகச் சிறந்த அறிவாளிகளாக இருப்பதன் காரணம் இதுவே.
அறிவு ஓங்கி நிற்கும் நிலையில் அங்கே அற்ப சுகங்களுக்கு இடமில்லை என்பதைக் காட்டவே, அறிவுக்குக் காரகனான புதன் உச்சம் பெறும் கன்னி ராசியில் சிற்றின்பகாரகன் சுக்கிரன் நீசமாகி வலு இழக்கிறார்.
புத்தி மழுங்கடிக்கப்பட்டு சிற்றின்ப சுகம் ஓங்கி நிற்கும் நிலையில் அறிவுக்கு அங்கே இடமில்லை, அங்கே அறிவு வேலை செய்யாது என்பதைக் குறிக்கவே கால புருஷனின் படுக்கையறை எனப்படும் அயன, சயன, போக ஸ்தானமான மீனத்தில் போகக் காரகன் சுக்கிரன் உச்சமாகும் நிலையில் புத்திக் காரகன் புதன் நீசமடைகிறார்.
இதுவே புதனின் உச்ச நீசத் தத்துவம்......
நவ கிரகங்களில் தன் சொந்த வீட்டில் ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம் என்ற மூன்று நிலைகளை ஒரு சேரப் பெறுவதும், நீசமடையும் பொழுதும் தன் சுய நட்சத்திரத்தில் வலுப் பெறுவதும் புதன் ஒருவர் மட்டுமே.
மற்ற இரு ஆதிபத்தியக் கிரகங்கள் அனைவரும் இரண்டு இடங்களில் ஆட்சி, ஒரு இடத்தில் உச்சம் என மூன்று இடங்களில் பலம் பெறும் நிலையில் புதன் இரண்டு இடங்களில் மட்டுமே வலுப் பெறுவதால்தான் அவர் உபய லக்னங்களுக்கு மட்டும் பத்ர யோகம் அளிக்கும் நிலைக்கு உள்ளாகிறார்.
புகழ்பெற்ற ஜோதிடர்கள் அனைவரும் புதனின் அருளைப் பெற்றவர்களே. புதன் கன்னியிலோ, மிதுனத்திலோ, மீனத்தில் நீசபங்கம் பெற்றோ பலமாக அமைந்த பலர் புகழ்பெற்ற ஜோதிடர்களாக இருக்கின்றனர்.
சந்திர கேந்திரத்தில் நிற்கும் புதனுக்கு அதிக வலிமை உண்டு. சூரியனை விட்டு விலகி அவரால் அதிக தூரம் செல்ல முடியாது என்பதால் புதனுக்கு அஸ்தங்க தோஷம் இல்லை என்று மகாபுருஷர் காளிதாசர் கூறுகிறார். அனுபவத்திலும் அது சரிதான்.
புதன் அஸ்தங்கம் அடையும் நிலையிலும் அவரது காரகத்துவங்கள் பெரும்பாலும் பாதிப்பதில்லை. ஆயினும் ராகுவுடன் அவர் மிகவும் அருகில் நெருங்கும் சமயத்தில் அவர் வலிமை இழக்கிறார். கேந்திராதிபத்திய தோஷத்தில் இவர் குருவுக்கு அடுத்த நிலையில் தோஷத்தை ஏற்படுத்துவார்.
பத்ர யோகத்தைத் தரும் நிலையில் புதன் இருக்கும்போது சந்திரன், செவ்வாய் குரு ஆகியோருடன் இணைவதும் அவர்களின் பார்வையைப் பெறுவதும் யோகத்தைப் பங்கப்படுத்தும். என்னதான் “குரு பார்க்க கோடி நன்மை” என்றாலும் புதனுக்கு அவர் ஆகாதவர் என்பதால் சில நிலைகளில் குரு, புதனைப் பார்ப்பது புதனின் தனித்துவத்தை பலவீனப்படுத்தும்.
புதன் கேந்திராதிபத்திய தோஷம் பெறும் நிலையில் தனித்து இருந்தால் ஜாதகரை பெரும் துன்பங்களுக்கு ஆளாக்குவார். கன்னி ராசியில் அவர் வக்ர நிலை அடையாமல் இருப்பதும் மிகவும் முக்கியம். உச்ச நிலையில் வக்ரம் பெறுவது நீச நிலையையே தரும் என்பதால் கன்னியில் வக்ரம் பெறும் புதனால் முழுமையான யோகத்தைத் தர இயலாது.
சமீபகாலங்களில் புகழ்பெற்று வரும் ஐ.டி.த்துறை எனப்படும் கணிப்பொறி மென்பொருள் சம்பந்தப்பட்ட துறைகளைக் குறிப்பவரும் புதன்தான். பெரும்பாலான மென்பொருள் மற்றும் கணினித் துறையினர் புதன் மிதுனம், கன்னியில் வலுப்பெற்ற நிலையில் பிறந்தவர்கள்தான்.
கணினி இல்லையேல், அதன் சாப்ட்வேர் இல்லையேல், இன்று உலகமே இல்லை என்ற வார்த்தையை சிறிது மாற்றி புதன் இல்லையேல் உலகு இல்லை என்றும் சொல்லலாம்.
ஜோதிட விதிகள் கட்டுறை தரும் படி தெரிவிக்கின்றேன்
புதனை பற்றிய சூட்சுமங்களை புரிய வைத்த தாங்களுக்கு நன்றி
புதனின் சூட்சமங்கள் மிக அருமை நன்றி சுவாமி வாழ்க பல்லாண்டு
Nice explanation sir
புதனின் சூட்சமங்கள் மிக அருமை புரிய வைத்த தங்களுக்கு நன்றி
ஐயா….புதன் எப்படி வக்கிரம் பெறும்?
ஐயா தங்கள் சிறப்பான கட்டுரைக்கு நன்றி.
இக்கட்டுரையில் எனக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு சந்தேகத்தை மட்டும் விளக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தாங்கள் இக்கட்டுரையில் புதன் 1,4,7,10 என்கிற கேந்திரங்களில் இருக்கும் போது பத்ர யோகம் அடை கிறார் என்றும், செவ்வாய்/குரு/சனி போன்றவர் தொடர்பு/சேர்க்கை ஏற்படும்போது பத்ர யோகம் பங்கப்படும் என்று கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியிருக்கிறீர்கள்.
ஆனால் கட்டுரையின் பிற்பகுதியில் புதன் கேந்திராதிபத்திய தோஷம் பெறும் நிலையில் தனித்து இருந்தால் ஜாதகரை பெரும் துன்பங்களுக்கு ஆளாக்குவார் என கூறியுள்ளீர்கள்
ஐயா இதனை தயவு செய்து விளக்கவும்.
நன்றி.
புதன் சந்திரன் இடையிலான நட்பு பகைக்கான கதையின் விளக்கம் சுமார்;அருமை.
நன்றி.
good article