ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
கிரகங்களின் சுப-பாப ஒளித்தன்மையைப் பொருத்தே ஒரு மனிதனின் ஆயுள் மற்றும் அவனது வாழ்க்கைத்தரம் அமைகிறது.
சுப கிரகங்கள் என்று சொல்லப்படும் குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் ஆகிய கிரகங்களின் ஒளியின் அளவு அதிகபட்ச நிலையிலிருந்து, அந்த ஒளித்தன்மை லக்னம், ராசியோடு சம்பந்தப்பட்டிருக்கும் நிலையில் பிறக்கும் மனிதன், நீண்ட ஆயுளையும், நீடித்த செல்வத்துடன் கூடிய வாழ்க்கை அமைப்பையும் பெறுகிறான்.
மனித வாழ்க்கையை 12 விதங்களாக பிரிக்கும் ஜோதிடத்தின் 12 பாவகங்களில், குறிப்பிட்ட ஒரு வீட்டோடு சுபக் கிரகங்கள் எத்தனைக்கெத்தனை கூடுதல், குறைவு ஒளியமைப்புடன் தொடர்பு கொள்கிறதோ அந்த அளவிற்கு அந்த மனிதனுக்கு நன்மை தீமைகளை அந்த பாவகம் செயல்படுத்துகிறது.
பாபக் கிரகங்களான சனி, செவ்வாய், ராகு, தேய்பிறைச் சந்திரன், பாபரோடு சேர்ந்த புதன், சூரியன், கேது ஆகிய எழுவரும் தங்களது பாப ஒளித்திறன் கூடியிருக்கும் நிலையில், இதையே வேறுவிதமாகச் சொல்வதாக இருந்தால் அங்கே சுப ஒளி குறைந்திருக்கும் நிலையில் லக்னம், ராசியோடு இவர்கள் தொடர்பு கொள்ளும்போது அந்த மனிதனுக்கு ஆயுளும், செல்வநிலையும் கிடைக்காமல் போகும்.
ஒரு மனிதனின் வாழ்க்கைக்குள் நடக்கும் சம்பவங்களைக் குறிக்கும் 12 பாவகங்களில், எந்தப் பகுதியை இந்த பாபக் கிரகங்கள் பார்வை, இருப்பு போன்ற தொடர்புகளால் முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறதோ, அந்த வீட்டின் பலன்கள் ஜாதகருக்கு கிடைக்காது. பாப ஆதிக்கம் முழுமையற்று இருக்கும் போது ஓரளவிற்குக் கிடைக்கும்.
எல்லா மனிதர்களுக்கும் எல்லா விஷயங்களும் முழுமையாகக் கிடைத்து விடுவதில்லை. அனைத்தும் நிறைவாக அனைவருக்கும் அமைந்து விடுவதில்லை.
உதாரணமாக, நீடித்த முழு ஆயுள் என்பது 120 வருடங்களாக ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. லக்னம், லக்னாதிபதி, ராசி, எட்டுக்குடையவன், எட்டாமிடம், ஆயுள்காரகன் சனி இவை அனைத்தும் முழுக்க முழுக்க பூரண சுப ஒளியோடு நிரம்பியிருக்கும் நிலையில் அதாவது ஒரு சதவிகித ஒளி கூட குறைந்திருக்காத பூரணத்தில் ஒரு மனிதன் நிறை ஆயுளான 120 வயதுவரை கண்டிப்பாக வாழ்வான்.
இந்த அமைப்பில் பாபக் கிரகங்கள் சம்பந்தப்பட்டு பாப ஒளி கலக்கும் போது அல்லது பாப ஒளியின் தாக்கத்தால் சுப ஒளி குறையும் போது, மனித ஆயுள் 120 வருடங்களிலிருந்து குறையும். சுப ஒளியும், பாப ஒளியும் ஒருங்கிணைக்கப்படும் ஒரு புள்ளியில் மனிதனின் ஆயுள் நிர்ணயிக்கப்படும். இதுவே வேத ஜோதிடத்தின் சூட்சுமம்.
சென்ற வாரம் நான் குறிப்பிட்ட உயிர்க் காரகத்துவம், ஜடக் காரகத்துவம் என்பதை ஒன்றாம் பாவகத்தோடு பொருத்திப் பார்ப்போமேயானால், இங்கே உயிர்க் காரகத்துவம் என்பது சம்பந்தப்பட்ட மனிதனின், அவனது இருப்பு எனப்படும் அவன் ஆயுள், மனம், சிந்தனை போன்றவைகளைக் குறிக்கிறது. அதாவது அந்த மனிதன் உயிரோடு இருப்பதைக் குறிக்கிறது.
லக்னத்தின் ஜடக் காரகத்துவம் என்பது உயிரோடு இருக்கும் அவனது சொகுசு வாழ்க்கை அல்லது தரித்திர வாழ்க்கை, அவனுக்கு கிடைக்கும் மரியாதை, அந்தஸ்து அல்லது அவனது கீழ் நிலைமை போன்றவற்றைச் சொல்கிறது.
சென்றவாரம் கேள்வி எழுப்பியிருந்த வாசகர், “கணிதம் மற்றும் பௌதிகத்தைப் போல நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல ஏன் ஜோதிடத்தில் விதிகள் இல்லை” என்று புலம்பியிருந்தார்.
இவரைப் போன்ற ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் ஜோதிடத்தைப் பற்றி அறிந்தது அவ்வளவுதான். நவீன விஞ்ஞானத் துறைகளான பௌதிகம், கணிதத்தை விட ஆழமான, புரிந்து கொள்ள மிகச் சிக்கலான துல்லிய விதிகள் ஜோதிடத்தில் இருக்கின்றன. ஆனால் இந்த விதிகளின் துல்லியத்தைக் கணிக்கும் ஆற்றல் நம்மிடம் இல்லை அவ்வளவுதான்.
கீழே காட்டப்பட்டுள்ள “ஆட்டிஸம்” குறைபாடுள்ள குழந்தையின் ஜாதகத்தில் ராசி, மற்றும் லக்னாதிபதிக்கு பலம் பெற்ற குருவின் பார்வை இருக்கிறது, அப்படி இருந்தும் இந்தக் குழந்தை சக மனிதனைப் போல, வாழத் தகுதியற்ற குழந்தையாகப் பிறந்தது ஏன் என்பதை ஜோதிடரீதியாக விளக்கும்படி ஏராளமானோர் கேட்டிருக்கிறீர்கள்.
இந்தக் குழந்தையின் ஜாதகத்தில் லக்னத்திற்கு எவ்வித சுப ஒளியும் கிடைக்காமல், லக்னாதிபதிக்கும், ராசிக்கும் குருவின் ஒளி கிடைத்திருக்கிறது. அதேநேரத்தில் ஆயுளைக் காட்டும் எட்டாமிடம் எவ்வித பங்கமும் இன்றி, அதே நேரத்தில் சுப ஒளியும் இன்றி, அதன் அதிபதியான புதன் தனித்து எட்டில் வலுவுடன் அமர்ந்திருக்கிறார். அவர் ஆறாம் அதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பது ஒருவிதமான குறைபாடு.

ஆக, லக்னாதிபதி, ராசி, எட்டாமிடம், ஆயுள்காரகன் ஆகியவைகள் சுப ஒளி நிலையில் வலுவாக இருப்பதால், இக் குழந்தை மத்திம ஆயுளையும் தாண்டி அறுபது வயதிற்கு மேல் உயிரோடு இருக்கும். அதேநேரம் எத்தனை காலம் உயிரோடு இருக்கும் என்பதை “நெற்றிப்பொட்டில் அடித்தாற் போலச்” சொல்ல விதிகள் ஜோதிடத்தில் இருக்கின்றனவா?
பொதுவான மாரகர்கள் 2, 7, 3, 8 என்பதை மனதில் நிறுத்தி, அடுத்து நடைபெற இருக்கும் தசா புக்திகள், அவைகளை இயக்கும் தசாநாதர்களின் நிலைகளைக் கணித்து, எல்லாவற்றையும் விட மேலாக ஆயுர்த்தாய கணிதங்களை முறையாகக் கணக்கிட்டு (இந்த ஆயுர்த்தாயக் கணிதங்களின் மூலத்தை நோக்குவோமேயானால் நான் சொல்லும் சுபத்துவம்- சூட்சும வலுவின் அடிப்படையில் இவை அமைந்திருப்பதை உணர முடியும்,) அஷ்டவர்க்கம், வர்க்கச் சக்கரங்களில் கிரகங்களுக்கு கிடைத்திருக்கும் சுப, பாப வலிமைகளை ஒப்பு நோக்கும்போது இக் குழந்தை, இந்த ஜாதகத்தில் இரண்டாம் வீட்டுக்கு சொந்தக்காரராகி மாரகாதிபதிபத்தியம் பெற்றுள்ள குருதசை வரை ஆயுளுடன் இருக்கும்.
அதிலும் துல்லியமாக, குரு பதினொன்றில் ஆட்சி பெற்றிருப்பதால், இரு ஆதிபத்தியமுள்ள கிரகங்கள் எந்த வீட்டோடு தொடர்பு கொள்கிறதோ, அந்த வீட்டின் பலனை முன்னர் செய்யும் எனும் விதிப்படி, குரு தசையின் பிற்பகுதி எட்டு வருடங்களில் இந்தக் குழந்தையின் ஆயுள் முடிவு இருக்கும்.
இன்னொரு மாரகாதிபதியான ஏழுக்குடைய சூரியனின் தசை, இக் குழந்தைக்கு வாலிபப் பருவத்தில் வருகிறது. 27 வயது முதல் 33 வயதுவரை இக்குழந்தைக்கு சூரிய தசை நடக்கும். அதுவும் மாரக அமைப்புதான் என்றாலும் ஆயுர்த்தாய கணக்குகளின் படியும், மாரக விதிகளின்படியும் இக்குழந்தை 60 வயது தாண்டி உயிரோடு இருக்கும் என்பதால் இக்குழந்தைக்கு சூரிய தசையில் மரணம் இல்லை.
இன்னும் ஒரு விளக்கமாக கும்பத்தின் அதிகாரப்பூர்வ மாரகாதிபதி செவ்வாயின் தசையும் இக் குழந்தைக்கு நடுப்பகுதியில் வருவதாக இருந்தாலும், எந்த லக்னத்திற்கு எவர் கொல்வார் என்கின்ற ஒரு விதியும் இருக்கிறது. இதுவும் மிகவும் சூட்சுமமான ஒன்றுதான்.
உதாரணமாக “மிதுனத்தை சந்திரன் கொல்லான்” என்கிற சுலோகம் ஒன்று உண்டு. அதாவது மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மாரகாதிபதி எனப்படும் இரண்டாம் அதிபதியாக சந்திரன் அமைந்தாலும், அவரது தசையில் மாரகம் நடக்காது என்பதற்கான சுலோகம் இது.
இது பெற்ற குழந்தையை தாய் எந்த நிலையிலும் கொல்ல மாட்டாள், மிக அரிதான சூழலில் மட்டுமே இது நடக்கலாம் எனும் அடிப்படையில் அமைகிறது. சந்திரனுக்கு புதன் மகன் என்பதால் மிதுனத்திற்கு சந்திர தசையை விட ஏழாம் அதிபதியான குருவின் தசையே மாரக தசையாக அமையும். குருதசையில் தான் மாரகம் நடக்கும்.
ஆகவே ஆயுளைப் பற்றி மட்டுமல்ல அனைத்து நிலைகளுக்கும் ஜோதிடத்தில் இதுபோன்ற விதி மற்றும் விதிவிலக்கு நிலைகள் இருக்கின்றன. “நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல விதிகள்” என்று வந்து விட்டாலே அங்கே “தலையில் சம்மட்டியால் அடித்தது போல” விதிவிலக்குகளும் இருந்தே தீரும். நாம்தான் நெற்றிப்பொட்டில் அடிப்பதைக் கவனிக்க வேண்டுமா, தலையில் சம்மட்டியால் அடி விழுவதைத் தடுக்க வேண்டுமா என்பதை, நம்முடைய ஞானத்தைக் கொண்டு முடிவு செய்துகொள்ள வேண்டும்.
இங்கே நான் குறிப்பிடும் ஆயுர்த்தாயக் கணிதங்கள் மற்றும் ஆயுளைக் கணக்கிடும் பொது விதிமுறைகளுக்கான துல்லியமான கணக்குகள் பாரம்பரிய ஜோதிடம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. என்னுடைய முதன்மை ஆசான் ஜோதிஷ வாசஸ்பதி, ஆத்தூர். மு. மாதேஸ்வரன் அய்யா அவர்கள் எழுதியுள்ள பல நூல்களில் இவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார். முக்கியமாக அவரது “ஜோதிட ஆராய்ச்சித் திரட்டு” எனும் நூல் பலவித சூட்சும விதிகள் நிரம்பியது.
ஆயுளைப் பற்றிய கணக்குகளை முழுமையாக அறிவதற்கு நீங்கள் அதற்கென உள்ள மூல நூல்களை முழுமையாகத் தெரிந்து கொண்டும், கற்றுக் கொண்டும் ஆக வேண்டும். ஆயுளுக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு பாவகத்திற்கும் என்ன பலன்கள் எப்போது நடக்கும் என்பதை அறிய ஜோதிட மூல நூல்களில் ஏராளமான கணித விதிகள் உள்ளன. அவற்றை ஓரளவாவது அறிந்திருக்கும் போதுதான் நான் கூறும் பலன்களை, மேற்கண்ட விதிகளின்படி பொருத்திப் பார்த்து இது உண்மையாக இருக்குமா என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.
இந்தக் கணிதங்கள் உங்களுக்குத் தெரியாவிட்டால் நான் சொல்வதை மேலோட்டமாகப் படித்துப் பார்த்து, இந்தக் கட்டுரையை நீங்கள் கடந்து செல்வீர்கள். நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல விதிகள் ஜோதிடத்தில் இருக்கின்றன என்பதை நீங்கள் உணர முடியாது. இது ஜோதிடத்தின் தவறல்ல. இந்த விதிகளை அறியாத உங்களின் தவறு.
மேற்கண்ட மூல கணித விதிகளை முழுமையாக உணர்ந்து கணக்கிட்டு, என்னுடைய சுபத்துவ, சூட்சுமவலு கோட்பாட்டினையும் புரிந்து கொண்டு இரண்டையும் சேர்த்து பலன் அறியும் பொழுது, அங்கே மகத்தான உண்மைக்கு அருகில் நீங்கள் ஜோதிடரீதியாக செல்ல முடியும்.
அதேநேரத்தில் எல்லோருக்கும் இந்த பாக்கியம் வாய்த்து விடுவதில்லை.
சமீபத்தில் நான் கண்ட, ஐம்பது வருடங்களுக்கு முன் திருக்கணிதப்படி கணிக்கப்பட்ட ஒரு ஜாதகத்தில், ஒரு கிராமத்து ஜோதிடர் தான் திருக்கணித முறைப்படி இந்த ஜாதகத்தை எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டு, ஆயுளைப் பற்றிய கணித விதிகளை ஜாதக நோட்டிலேயே எழுதி, இந்த ஜாதகரின் ஆயுள் 59 வயதில், இந்த தசாபுக்தி அந்தரத்தில் முடியும் என்று ஜாதகத்தில் குறிப்பிட்டு, அந்த அந்தர காலத்துடன் ஜாதகரின் ஆயுள் நிலையை முடித்திருந்தார். அதே தசாபுக்தி அந்தரத்தில் ஜாதகர் இறந்தும் விட்டார்.
அவரது மகனால் அந்த ஜாதக நோட்டு என்னிடம் காண்பிக்கப்படும் போது, ஜாதகர் குழந்தையாக இருக்கும்பொழுதே இதைத் தெளிவாக எழுதிய அந்தப் பெயர் தெரியாத ஜோதிட மேதையின் கணிப்புத் திறமையை கண்டு மெய்சிலிர்த்துப் போனேன். தன்மீதும், வேத ஜோதிடத்தின் மீதும் முழு நம்பிக்கை வைத்திருந்த இது போன்றவர்களால்தான் ஜோதிடம் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. என்றும் வாழும்.
அடுத்த வாரமும் தொடருவோம்.
(06.09.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.